இணையத்தில் வெளியானது லியோ: படக்குழு அதிர்ச்சி
பைரசி தளங்களில் லியோ திரைப்படம் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) வெளியாகிவுள்ளது.
நடிகர்கள் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஸ்கின், கெளதம் வாசுதேவ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் பாதுகாப்பு காரணங்களால் அதிகாலை காட்சிக்கு மாநில அரசு அனுமதி வழங்கவில்லை. காலை 9 மணிக்குதான் முதல் காட்சி துவங்கியது.
மேலும், இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. இந்நிலையில், பைரசி தளங்களில் லியோ திரைப்படம் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
முன்னதாக, இந்தத் திரைப்படத்தை சட்டவிரோதமாக 1,246 இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டுமென அரசு, தனியாரின் இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான ‘செவன் ஸ்கீா்ன்’ நிறுவனத்தின் இயக்குநா் லலித்குமாா் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையும் படிக்க: நடிகர் அஜித்தை இயக்க ஆசை: லோகேஷ் கனகராஜ்
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் விஜயன் சுப்ரமணியன், ‘சட்டவிரோதமாக இணையதளங்களில் லியோ படம் வெளியானால் பெருத்த நஷ்டம் ஏற்படும். மேலும், இந்தப் படத்தில் பணியாற்றிய திரை கலைஞா்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படும்’ என வாதிட்டாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, லியோ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டாா். மேலும், இணையதள நிறுவனங்கள், சட்டவிரோதமாக இந்தத் திரைப்படம் வெளியாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், தற்போது பைரசி தளங்கள் மற்றும் டெலிகிராம் செயலியில் இப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டுள்ளனர்.