25 ஆண்டுகள் நட்பு.. அனுராக்குடன் இனிய நினைவுகளைப் பகிர்ந்த சுதா கொங்காரா!
இயக்குநர் அனுராக் காஷ்யப் உடனான 25 ஆண்டுகால நினைவுகள் குறித்து சுதா கொங்காரா பகிர்ந்துள்ளவை...
இயக்குநர் அனுராக் காஷ்யப் உடனான 25 ஆண்டுகால நட்பு குறித்து சுதா கொங்காரா தனது எக்ஸ் பக்கத்தில் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.
தேசிய விருதுகளை வென்ற சூர்யாவின் சூரரைப் போற்று, ரித்திகா சிங்கின் இறுதிச்சுற்று ஆகியப் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம்வருபவர் சுதா கொங்காரா. இவர் தற்போது சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி நடிப்பில் ‘பராசக்தி’ படத்தை இயக்கியுள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது.
இந்த நிலையில், இயக்குநர் மணிரத்னத்தின் உதவி இயக்குநராக சினிமா பயணத்தைத் துவங்கிய சுதா கொங்காரா, ஹிந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் உடனான 25 ஆண்டுகால நட்பு குறித்த இனிமையான நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.
ஹிந்தியில் மிகவும் முக்கியமான இயக்குநரான அனுராக் காஷ்யப், கேங்ஸ் ஆப் வஸேப்பூர், ராமன் ராகவ், தேவ் டி உள்ளிட்ட படங்களுக்கு பெயர் பெற்றவர். இவர் தமிழில் இமைக்கா நொடிகள், லியோ, மகாராஜா உள்ளிட்டப் படங்களில் வில்லனாகவும் மிரட்டியிருந்தார்.
இவர் தனது இயக்கம் மற்றும் திரைக்கதைக்கென 4 ஃப்லிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். இவர் 2004 ஆம் ஆண்டு வெளியான மணிரத்னத்தின் 'யுவா' படத்தில் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில், அனுராக் காஷ்யப் உடனான நட்பு குறித்து இயக்குநர் சுதா கொங்காரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “நாம் கடைசியாக சந்தித்து 15 ஆண்டுகள் ஆகின்றன அனுராக் காஷ்யப். என்னுடைய மிகவும் பிடித்தமான எழுத்தாளர் - இயக்குநர். நாம் 25 ஆண்டுகளுக்கு முன்னர் சந்திந்துக்கொண்ட முதல்நாள் இன்னும் ஞாபகம் இருக்கிறது.
மணி சாருக்கும் உங்களுக்கு இடையில் மொழி பெயர்ப்பதில்(ஹிந்தி) ஒரு பாலமாக இருந்தேன். அப்போது, “நீங்கள் எப்போது முதல் படத்தை இயக்கப் போகிறீர்கள் - அது காதல் கதை தான?”!! (அனுராக் கேட்டுள்ளார்.)
நீங்கள் மூன்று மணி நேரத்திலேயே என்னை டீக்கோட் செய்துவிட்டீர்கள். இருளைச் சார்ந்தவர் நீங்கள் (core movie -ஐ குறிப்பிடுகிறார்.); சூரிய ஒளியைப் போன்றவர் நான்(கமர்ஷியல் படங்கள்), எப்போது காதல் கதை எழுதி எனக்குத் தரப் போகிறீர்கள் மிஸ்டர்?” எனக் குறிப்பிட்டுள்ளார்.