பிராட் பிட் - ஏஞ்சலினா ஜோலி விவாகரத்து!
விவாகரத்து கோரி ஏஞ்சலினா ஜோலி நீதிமன்றத்தில் மனு...
ஹாலிவுட் நட்சத்திரத் தம்பதிகளான பிராட் பிட் - ஏஞ்சலினா ஜோலி ஆகிய இருவரும் கருத்துவேறுபாடுகளால் பிரிய உள்ளார்கள். விவாகரத்து கோரி ஏஞ்சலினா ஜோலி நீதிமன்றத்தில் மனு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஸ்மித் படத்தில் ஒன்றாக நடித்தபோது பிராட் பிட், ஏஞ்சலினா ஜோலி ஆகிய இருவருக்கும் காதல் மலர்ந்தது. 2004-ம் ஆண்டு முதல் ஒன்றாக வாழும் இருவரும் 2014-ல் திருமணம் செய்துகொண்டார்கள். பிராட் பிட்டுக்கு இது இரண்டாவது திருமணம். அவருடைய முதல் மனைவி, பிரபல நடிகையான ஜெனிபர் அனிஸ்டன். ஏஞ்சலினா ஜோலிக்கு, பிராட் பிட் மூன்றாவது கணவர். இந்தத் தம்பதியினருக்கு மூன்று வளர்ப்பு குழந்தைகள் உள்ளிட்ட ஆறு குழந்தைகள் உண்டு.
கருத்துவேறுபாடுகள் காரணமாக சமீபகாலமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். இந்நிலையில், விவாகரத்து கோரி ஏஞ்சலினா ஜோலி நீதிமன்றத்தில் மனு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
சிலவருடங்களுக்கு முன்பு, ஏஞ்சலினா ஜோலிக்குப் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய மரபணுக்கள் இருப்பது தெரியவந்தது. மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, 2013-ல் அறுவை சிகிச்சை மூலம் மார்பகங்களை அகற்றிக் கொண்டார். மேலும், கடந்த வருடம் தனது கருப்பையையும் கருமுட்டைக் குழாய்களையும் அகற்றிக் கொண்டார். இதன்மூலம் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கினார். இதனால் அவர் மருத்துவ உலகில் பாராட்டப்பட்டார்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த நட்சத்திரத் தம்பதியினரின் விவகாரத்துச் செய்தி, உலகம் முழுக்க உள்ள சினிமா ரசிகர்களிடையே பரபரப்பாக விவாதிக்கப்படு வருகிறது.