அருவி படத்தால் யாராவது காயப்பட்டிருந்தால் எங்கள் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம் என அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு கூறியுள்ளார்.
'ஜோக்கர்', 'தீரன் அதிகாரம் ஒன்று' போன்ற படங்களைத் தயாரித்த எஸ்.ஆர்.பிரபுவின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'அருவி'. அருண் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தில் அதிதி பாலன், அஞ்சலி வரதன் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - பிந்து மாலினி & வேதாந்த் பரத்வாஜ். படவிழாக்களில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களின் பலத்த பாராட்டைப் பெற்றுள்ளது.
எனினும் இந்தப் படத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியைக் கிண்டல் அடித்தும் விமரிசனங்கள் செய்தும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் ட்விட்டரில் தனது வருத்தத்தைப் பதிவு செய்தார் அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.
இதையடுத்து ட்விட்டரில் அருவி படத்தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு கூறியதாவது:
இது அன்பை, மனிதத்தை பறைசாற்றும் நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்ட படம். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல. இருந்தும், யாராவது காயப்பட்டிருந்தால் எங்கள் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.