நடிகர் நாகார்ஜூனாவின் மகன் அகிலின் திருமணம் ரத்தாகியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
நடிகர் நாகார்ஜூனாவின் மகன் அகில் அக்கினேனிக்கும் தொழிலதிபர் ஜிவிகே ரெட்டியின் மகள் ஸ்ரேயாவுக்கும் கடந்த டிசம்பரில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வருடம் மே மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கு அடுத்ததாக நாகார்ஜூனாவின் மற்றொரு மகனான நாக சைதன்யாவுக்கும் நடிகை சமந்தாவுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
ஆனால் திடீரென அகில் - ஸ்ரேயா திருமணம் ரத்தாகியுள்ளதாகத் தெரிகிறது. திருமணத்துக்காக இத்தாலி செல்லவிருந்த உறவினர்களின் விமான டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த வாரம் வரை நிலைமை சுமூகமாக இருந்துள்ளது. திடீரென கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் திருமணம் ரத்தாகியுள்ளது, எனவே விமான டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தற்போது தகவல் கிடைத்துள்ளது.
இந்தியாவிலிருந்து உறவினர்கள், நண்பர்கள், திரைப் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என 700 பேர் இத்திருமணத்துக்காக ரோம் நகருக்குச் செல்வதாக இருந்த நிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.