நீ தவறு செய்யவில்லையென்றால் யாருக்காகவும் பயப்படாதே என மகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக பிரியங்கா சோப்ராவின் தாய் பேட்டியளித்துள்ளார்.
ஜெர்மனி, ஸ்பெயின், ரஷியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குக் கடந்த மே மாதம் 6 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் பிரதமர் மோடி. பெர்லினில் நடிகை பிரியங்கா சோப்ரா, மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். இதுகுறித்து ட்விட்டரில் தெரிவித்த பிரியங்கா, பிரதமர் பெர்லினில் இருக்கும்போது நானும் அங்கு வந்திருப்பது தற்செயல். தொடர் பணிகளுக்கு இடையில் என்னைச் சந்திக்க நேரம் ஒதுக்கித் தந்த பிரதமருக்கு நன்றி என்று குறிப்பிட்டார்.
பிரதமரை பிரியங்கா சோப்ரா சந்தித்தபோது அணிந்த உடையும் உட்கார்ந்த விதமும் விமரிசனங்களுக்கு ஆளாகின. இதையடுத்து அதேபோல தன் தாயுடன் அமர்ந்த புகைப்படத்தை வெளியிட்டு விமரிசனங்களுக்கு மறைமுகமாகப் பதிலளித்தார் பிரியங்கா.
இந்நிலையில் இதுபோன்ற விமரிசனங்களை பிரியங்கா எப்படி எதிர்கொள்கிறார் என அவருடைய தாய் மது சோப்ரா ஒரு பேட்டியில் கூறியதாவது:
நீ எந்தத் தவறும் செய்யாமல் இருந்திருந்தால் எதற்காகவும் அஞ்சத் தேவையில்லை என மகளுக்குக் கற்றுக்கொடுத்துள்ளேன். அப்போது அவர் பே வாட்ச் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருந்தார். திடீரென மோடியைச் சந்திக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் அவரால் உடை மாற்றிக்கொள்ள முடியாமல் போனது. அது திட்டமிட்ட சந்திப்பு அல்ல.
இதனால் எழுந்த விமரிசனங்களுக்குப் பதிலளிக்கவே பிரியங்கா என்னுடன் இணைந்த அந்தப் புகைப்படத்தை வெளியிட்டார். இப்போதெல்லாம் சமூகவலைத்தளங்களில் கவனம் ஈர்க்கவே இதுபோல செய்கிறார்கள். இரண்டு நிமிட புகழுக்காகச் செய்கிறார்கள். அதில் எவ்வித நம்பகத்தன்மையும் கிடையாது என்று கூறியுள்ளார்.