முகப்பு
செய்திகள்

லண்டன் இசை நிகழ்ச்சியில் அதிகமாகத் தமிழ்ப் பாடல்களைப் பாடிய ரஹ்மானுக்கு எதிர்ப்பு!

லண்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் தமிழ்ப் பாடல்கள் அதிகமாகப் பாடப்பட்டதாகப் புகார்கள்...

Updated On : 14 ஜூலை, 2017 at 10:51 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 9:55 PM

தனது 25 வருட திரைப்பயணத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்த ஏ.ஆர். ரஹ்மான் திட்டமிட்டுள்ளார். 

'நேற்று இன்று நாளை’ என்கிற இந்த இசை சுற்றுப்பயணத்தின் முதல் நிகழ்ச்சி ஜுலை 8 அன்று லண்டனில் நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியில் பென்னி தயால், நீத்தி மோகன், ஹரிசரன், ஜொனிடா காந்தி, ஜாவத் அலி போன்ற பிரபல பாடகர்கள் பங்கேற்றார்கள்.

இந்நிலையில் இந்த இசை நிகழ்ச்சி தற்போது சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது. லண்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் தமிழ்ப் பாடல்கள் அதிகமாகப் பாடப்பட்டதாகப் புகார்கள் வந்துள்ளன. சமூகவலைத்தளங்களில் பல்வேறு புகார்கள் இதுகுறித்துப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் சமூகவலைத்தளத்தில் மீண்டுமொரு தமிழ் - ஹிந்தி விவாதம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் சிலர் வெளியிட்டுள்ள தகவல்களின்படி இந்நிகழ்ச்சியில் 16 ஹிந்திப் பாடல்களும் 12 தமிழ்ப் பாடல்களும் பாடப்பட்டுள்ளன. ஆனாலும் ரஹ்மான் தரப்பிலிருந்து இந்த சர்ச்சை குறித்து இதுவரை எந்தவொரு பதிலும் அளிக்கப்படவில்லை. இதனால் இந்நிகழ்ச்சி குறித்த விவாதம் சமூகவலைத்தளத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ரஹ்மானின் இசைப் பயணம் அமெரிக்காவில் தற்போது தொடர்கிறது. நியூயார்க்கில் இன்று 'Yesterday, Today, Tomorrow’ இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.