அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்
தொகுதி மறுவரையறை முடிவு அவையில் தென் மாநிலங்களின் பலத்தைக் குறைக்காது - அமித் ஷா விளக்கம்
தொகுதி மறுவரையறை முடிவு அவையில் தென் மாநிலங்களின் பலத்தைக் குறைக்காது என்று அமித் ஷா விளக்கமளித்தார்.
மக்களவை-பேரவைகளில் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டுமுதல் அமலாக்கவும், அதற்கு ஏதுவாக மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 850 வரை அதிகரிக்கவும் வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா உள்பட மூன்று மசோதாக்கள் மக்களவையில் வியாழக்கிழமை (ஏப். 16) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மக்களவையில் விவாதத்தின்போது பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகத்துக்கு கூடுதலாக 20 இடங்களும் கேரளத்துக்கு கூடுதலாக 10 இடங்களும் தெலங்கானாவுக்கு கூடுதலாக 9 இடங்களும் ஆந்திர பிரதேசத்துக்கு கூடுதலாக 13 இடங்களும் அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.
Advertisement
விவாதத்தின்போது அவர் தெரிவித்திருப்பதாவது, “இந்த மூன்று மசோதாக்களும் அவையில் தென் மாநிலங்களின் பலத்தைக் குறைக்கும் என்ற கருத்து நிலவுகிறது. இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த நான் விழைகிறேன்.
கர்நாடகத்துக்கு நாடாளுமன்றத்தில் 28 இடங்கள் உள்ளன. இப்போதைக்கு, 5.15 சதவீதமாக உள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டவுடன், அந்த இடங்கள் 42-ஆக உயரும். இது 5.14 சதவீதமாக மாறியிருக்கும்.
உங்களுடைய பலம் குறையாமலிருக்கும் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். அவையில் எண்ணிக்கை உயரப்போகிறது. இடங்கள் 59 வரை உயரும். சதவீதமானது 7.23-ஆக மாறும்.
தமிழ்நாட்டில் தேர்தலின்போது இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்று கவலைகொள்கிறார்கள். தொகுதி மறுவரையறை ஆணையத்தின் அறிக்கை நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்ற பிறகே அமல்படுத்தப்படும்.
2029-க்கு முன் அது நிறைவேற்றப்படும் என்று எந்தவொரு கேள்வியும் இங்கு இல்லை. அதுவரையில் நடைபெறும் எல்லா தேர்தல்களும் தற்போதிருக்கும் இடங்களின் எண்ணிக்கையிலேயே நடைபெறும்” என்றார்.