இனிமேல் திரைப்படங்களில் பாடுவதில்லை எனப் பிரபல பாடகர் கானா பாலா முடிவெடுத்துள்ளார்.
போக்குவரத்து விதிகள் பற்றி கானா பாலா பாடிய பாடலின் விழிப்புணர்வு வீடியோ கேசட் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதன் வெளியீட்டு விழா சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடந்தது. ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் விழிப்புணர்வு பாடல் காட்சி அடங்கிய வீடியோ கேசட்டை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கானா பாலா கூறியதாவது: எனக்கு 48 வயதாகிறது. என் பிறந்தநாள் தீர்மானமாக இனிமேல் சினிமாவில் பாடுவதில்லை என முடிவெடுத்துள்ளேன். விளம்பரப் பாடல்களிலும் பாடமாட்டேன். போதுமான அளவு பிரபலமாக உள்ளேன். அடுத்தவர்களுக்கு வழிவிட இந்த முடிவை எடுத்துள்ளேன். நான் பாடிய பெரும்பாலான பாடல்களை நானே எழுதியுள்ளேன். இனி அப்படி எழுதமாட்டேன். அர்த்தமில்லாத வார்த்தைகளைக் கொண்டு பாடல் எழுத வாய்ப்பு வந்தது. ஆனால் நான் எழுதவில்லை.
இனிமேல் பொதுமக்களுக்குப் பயன்படும் விழிப்புணர்வு பாடல்களை மட்டுமே பாடவுள்ளேன். அத்தகைய பாடல்களையும் இலவசமாக பாடுவேன். மாஞ்சா நூல் ஆபத்து குறித்து ஒரு பாடலைப் பாடியுள்ளேன். விரைவில் அதை வெளியிடுவேன் என்றார். கானா பாலா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றுகிறார் என்பது பலரும் அறியாத தகவல்.