ரஜினி நடிக்கும் காலா படத்துக்கு எதிராகப் புகார்!
ரஜினி நடிக்கும் காலா படத்தின் தலைப்பு, கதைக் கரு தன்னுடையது என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.
ரஜினி நடிக்கும் காலா படத்தின் தலைப்பு, கதைக் கரு தன்னுடையது என ராஜசேகர் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
ரஜினி அடுத்து நடிக்கவுள்ள காலா படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற பரபரப்பான சூழலில் 2.0 படத்தையடுத்து பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி. இதன் தலைப்பு - காலா கரிகாலன். நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகிறது. இதற்கு முன்பு ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கினார் பா.இரஞ்சித். அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ரஜினியை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.
கபாலி படத்தைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, நானா படேகர் உள்ளிட்ட சிலர் இப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளனர். இது ரஜினியின் 164-வது படம்.
Advertisement
இந்நிலையில் காலா படத்துக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உதவி இயக்குநர் ராஜசேகர் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
காலா என்கிற தலைப்பு என்னுடையது. அந்தப் படத்தின் கதைக் கருவும் என்னிடமிருந்து திருடப்பட்டுள்ளது. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் 1996-ம் ஆண்டே காலா படப்பெயரைப் பதிவு செய்துள்ளேன். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.