விஜய் ஒரு தலைவராக உருவாகி மாற்றத்தைத் தரவேண்டும்: மெர்சல் சர்ச்சை குறித்து எஸ்.ஏ. சந்திரசேகர்
விஜய் எந்த மதம் என்பது கடந்த 25 வருடங்களாக எல்லோருக்கும் தெரியும். நாங்கள் எதையும் மறைக்கவில்லை...
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் - மெர்சல். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். மெர்சல் படத்தில் மருத்துவர்களை பற்றி உண்மையற்ற, மலிவான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக மருத்துவர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.
விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் மெர்சல் சர்ச்சைகள் குறித்து கூறியதாவது:
விஜய்யிடம் என் தாக்கம் இருக்கிறது என்பதை விட ஒரு குடிமகனாக அவருக்குக் கோபம் இருப்பதாக அவர் படங்கள் பார்க்கும்போது நான் உணர்கிறேன். அவரிடமுள்ள ஊடகம் சினிமா. அவர் பெரும்பாலும் ஒரு காந்தியவாதி. மென்மையாகவே பேசுவார். விஜய் ஒரு தலைவராக உருவாகி அவரை நம்பியுள்ளவர்களுக்கு மாற்றத்தை தர வேண்டும். பதவிக்கு வந்து தருகிறாரா அல்லது ஒரு அமைப்பிலிருந்து தருவாரா என்று எனக்குத் தெரியாது.
எந்த நடிகர்களுக்கு ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்களோ அவர்களைக் கண்டு அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் நடிகர்களைக் கண்டு பயப்படவில்லை. தான் இருக்கும்வரை வேறு எந்த நடிகரும் ஆட்சிக்கு வந்துவிடமுடியாது என்று தைரியமாக இருந்தார்.
விஜய் எந்த மதம் என்பது கடந்த 25 வருடங்களாக எல்லோருக்கும் தெரியும். நாங்கள் எதையும் மறைக்கவில்லை. ஹாசன் என்று பெயர் வைத்திருப்பதால் கமல் முஸ்லிமா? அவர் ஒரு இந்தியன். விஜய்யைப் பள்ளியில் சேர்க்கும்போது அவருடைய மதம், ஜாதி என்ன என்று கேட்டபோது இந்தியன் எனப் பதில் அளித்தேன். இது தவறு என்று சொன்னார்கள். இல்லை, விஜய் ஒரு இந்தியன்தான் என்று வலியுறுத்தினேன். எனவே விஜய் மீது மதச்சாயத்தைப் பூசவேண்டாம். மதத்தின் பெயரால் இந்தியாவைப் பிளவுபடுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார்.