முகப்பு
செய்திகள்

காலா படத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

பிரபலம் ஆகலாம் என்ற விளம்பர நோக்கத்திலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது...

Updated On : 31 அக்டோபர், 2017 at 4:44 PM
பகிர்:

ரஜினி நடித்துவரும் காலா படத்துக்குத் தடை கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'காலா' என்ற கரிகாலன்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தை நடிகர் தனுஷின் பட தயாரிப்பு நிறுவனமான உண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் தலைப்பு, கதையைப் பயன்படுத்த தடை கோரி சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் சென்னை 4-வது கூடுதல் சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது: 

Advertisement

நடிகர் ரஜினிகாந்த் இப்போது படப்பிடிப்பு நடத்தி வரும் "காலா’ (எ) கரிகாலன் படத்தின் தலைப்பு, மூலக்கரு அனைத்தும் என்னுடைய உருவாக்கம் ஆகும். இந்தத் தலைப்பை ஏற்கெனவே தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்திருக்கிறேன். ஆனால், செல்வாக்கு மிகுந்த ஒருசிலருக்கு ஆதரவாக, என்னுடைய தலைப்புப் பதிவை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை புதுப்பிக்காமல் கைவிட்டுள்ளது. பதிவு விதிகள் தவறாக பயன்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், எனது தலைப்பும், மூலக் கருவும் மறுபதிப்பு செய்து படமாக எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, ஏற்கெனவே "காலா’ படத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, நிலுவையில் உள்ளன. எனவே, "காலா’ படத்தின் படப்பிடிப்பு மேற்கொண்டு தொடர தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் பா.ரஞ்சித், உண்டர்பார் பட நிறுவனம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டது.

உண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், 'காலா' படத்தின் கதையை யாரிடம் இருந்தும் திருடவில்லை. மனுதாரர், கரிகாலன் என்ற பெயரில், தனது கதையை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்துள்ளார். ஒரு படத்தின் கதையை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிலோ அல்லது தமிழ்நாடு படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலோ பதிவு செய்திருந்தால், ஒரு ஆண்டுக்குள் அந்த தலைப்பில் படம் எடுக்கப்பட வேண்டும். அதேபோன்று, தலைப்பின் பதிவை புதுப்பிக்க வேண்டும். இல்லையென்றால், படத்தின் தலைப்பு தானாகவே காலாவதியாகி விடும். கரிகாலன் என்ற தலைப்பை மனுதாரர் கடந்த 1996-ம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்துள்ளார். கடந்த 2006-ஆம் ஆண்டுக்கு பின்பு கரிகாலன் என்ற தலைப்பின் பதிவை மனுதாரர் புதுப்பிக்கவில்லை. எனவே, இந்த வழக்கை தொடர மனுதாரருக்கு எந்த உரிமையும் இல்லை. நடிகர் ரஜினிகாந்தை 1991-1992-ஆம் ஆண்டில் சந்தித்து கரிகாலன் படத்தின் கதையை தெரிவித்ததாக மனுதாரர் கூறி உள்ளார்.  நடிகர் ரஜினிகாந்தை ஏராளமானோர் சந்தித்து வருகின்றனர். அனைவரையும் ஞாபகம் வைத்துக்கொள்வது என்பது இயலாத காரியம் ஆகும்.  மேலும் அவர் மனுதாரரை பார்த்ததில்லை. சுமார் ரூ.160 கோடி செலவில் எடுக்கப்பட்டு வரும் இந்தப்படம் அடுத்த ஆண்டு (2018) கோடை காலத்தில் (ஏப்ரல் அல்லது மே மாதம்) வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம். பிரபலமான நடிகர்கள் நடிக்கும் படத்துக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்தால் பிரபலம் ஆகலாம் என்ற விளம்பர நோக்கத்திலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, மனுதாரருக்கு அபராதம் விதித்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்கள். 

இந்நிலையில் காலா படத்துக்குத் தடை கோரிய மனுவை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. காப்புரிமை தொடர்பான வழக்கு என்பதால் மனுதாரர் உயர் நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.