நிவின் பாலியின் சக்ஸஸ் சீக்ரெட்!
ஒரு படத்தில் நடிப்பது என்பது ஹீரோக்களைப் பொருத்தவரையில் தங்களை முற்றிலும் உருமாற்றிக் கொள்வது.
ஒரு படத்தில் நடிப்பது என்பது ஹீரோக்களைப் பொருத்தவரையில் தங்களை முற்றிலும் உருமாற்றிக் கொள்வது. தான் ஏற்றுக் கொள்ளவிருக்கும் கதாபாத்திரத்துக்காக ஹோம்வொர்க் செய்து அப்பாத்திரத்துக்கு நியாயம் செய்யும் வகையில் சிறப்பான ஒரு பங்களிப்பைத் தர முடியும். தொழிலில் சிறிப்பானவராக விளங்குவதற்கு, சற்று கூடுதலாக மெனக்கிட்டால் வெற்றி நிச்சயம். அத்தகைய மெனக்கிடல்களைச் செய்பவர்கள் திரையுலகில் எல்லா காலத்திலும் உள்ளார்கள்.
ஹாலிவுட்டில் பேட்மேன் ட்ரையாலஜியில் நடித்த கிறிஸ்டியன் பேல், பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் நாயகன் ஜானி டெப், பாலிவுட்டில் அமீர் கான், கோலிவுட்டில் கமல், விக்ரம் என இந்தப் பட்டியல் நீளமானது. மலையாளத்தில் நிவின் பாலி அதில் ஒருவர் என்பது அவர் சிரத்தையுடன் தன்னை ஒவ்வொரு படத்துக்கும் தயார் செய்து கொள்ளும் விதமே சாட்சி.
நிவின் பாலி தற்போது ‘காயம்குளம் கொச்சுன்னி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ரோஷன் ஆண்ட்ரூஸ் இந்தப் படத்தை இயக்குகிறார். அமலாபால் நாயகியாக நடிக்கிறார். அது 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கொள்ளைக்காரன் பற்றிய படம் என்பதால் நிவின் பாலி அப்பாத்திரத்தின் தன்மை அறிந்து பாபு ஆண்டனி என்பவரிடம் களரி கற்றுக் கொண்டு பயிற்சி செய்து வருகிறார்.
Advertisement
Advertisement
படத்திலும் பாபு அவருக்கு களறி கற்றுக் கொடுக்கும் தங்கள் என்ற பெயருடைய ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். கேரளத்தின் பண்டைய தற்காப்பு கலையான களறி படத்தின் முக்கியப் பங்கு வகிக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.
மஞ்சேஷ்வர், உடுப்பி போன்ற இடங்களில் படப்பிடிப்பை முடித்தபின்னர் தற்போது மங்களூரில் படமாக்கம் நடைபெறுகிறது. 2018 தொடக்கத்தில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடக்க உள்ளது. தினமும் காலை படப்பிடிப்புக்கு முன் நிவின் களரி பயிற்சி செய்கிறார். இதற்காக களரி மாஸ்டர்கள் படப்பிடிப்பு குழுவுடன் இணைந்துள்ளனர்.
இயக்குனர் கெளதம் ராமச்சந்திரன் இயக்கித்தில், 'ரிச்சி' என்ற படத்தில் நிவின் பாலி நடித்துள்ளார். தூத்துக்குடியைக் கதைக்களமாகக் கொண்டு, இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தூத்துக்குடி தாதாவாக நிவின்பாலி நடிக்கும் இந்தப் படம், ஆக்ஷன் கலந்த கமெர்ஷியல் படமாகும். கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டி இயக்கி நடித்த 'உலதவரு கண்டந்தே’படத்தின் ரீமேக்தான் ரிச்சி. இது சாண்டல்வுட்டில் மிகப் பெரிய வெற்றி பெற்றது. ரிச்சி என்பது நிவின் பாலி கதாபாத்திரத்தின் பெயர் ஆகும். முதல் முறையாக நிவின் பாலியே சொந்தக் குரலில் பேசியுள்ளார்.
காணாமல் போன கேரள கப்பல் பற்றிய கதையான 'கைரளி’எனும் படத்தில் அடுத்து நடிக்கிறார் நிவின் பாலி.