முகப்பு
செய்திகள்

என் படத்தில் நடிக்கத் தயங்கும் நடிகர்கள்: ஃபைனான்சியர் விவகாரத்தில் விளைவுகளைச் சந்திக்கும் இயக்குநர் சுசீந்திரன்!

ஃபைனான்சியரை விமரிசனம் செய்ததால் நடிகர்களும் ஃபைனான்சியர்களும் என்னுடன் படம் பண்ணத் தயங்குகிறார்கள் என்று...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:38 PM
பகிர்:

ஃபைனான்சியரை விமரிசனம் செய்ததால் நடிகர்களும் ஃபைனான்சியர்களும் என்னுடன் படம் பண்ணத் தயங்குகிறார்கள் என்று இயக்குநர் சுசீந்திரன் கூறியுள்ளார்.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம், சென்னை வளசரவாக்கத்தில், சினிமா ஃபைனான்சியர் கடனைக் கேட்டு மிரட்டியதால், திரைப்பட இயக்குநர் சசிகுமாரின் மைத்துனர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதையடுத்து இயக்குநர் சுசீந்திரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இதற்குக் காரணமான மதுரை அன்பு தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தார். இதையடுத்து ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியதாவது: 

நான் கடவுள் சமயத்தில் இந்த அன்புச்செழியனால் அஜித் சாரும் அசோக் அண்ணன் மனநிலைக்கு ஆளானார். தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்கள் லிங்குசாமி, கெளதம் மேனன், தயாரிப்பாளர்கள் முக்கால்வாசி பேரும் பல நடிகர்களும் இந்த அன்பு செழியனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இமான் இசையமைப்பாளரிடம், எந்தப் படத்துக்கு அவர் இசையமைக்கவேண்டும் என்று மறைமுகமாகச் சிரித்துக்கொண்டே கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் இந்த அவல நிலைக்குக் காரணமான அன்புச்செழியன் தண்டிக்கப்படவேண்டும். மத்திய அரசுக்கும் வருவாய்த்துறைக்கும் ஒரு வேண்டுகோள். தமிழ்நாட்டின் பாதி பணம் அன்புவிடம் இருக்கும். தயவு செய்து அவர் வீட்டிலும் ரெய்டு செய்யவும் என்று கூறினார். 

இந்நிலையில் இயக்குநர் சுசீந்திரன் சமீபத்தில் ஒரு பதிவு எழுதியுள்ளார். அவர் கூறியதாவது:

இதுவரை நான் யாரிடமும் வட்டிக்குப் பணம் வாங்கியதும் இல்லை, கொடுத்ததும் இல்லை. அசோக் அண்ணனின் மரணம் குறித்து நான் பேசியதால் அந்த ஃபைனான்சியரிடம் பணம் வாங்கும் தயாரிப்பாளர்களும் நடிகர்களும் என்னுடன் படம் பண்ணத் தயங்குகிறார்கள். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. 

எனது முதல் படத்திலேயே முழுவதும் புது நடிகர்கள், புது தொழில்நுட்பக் கலைஞர்கள், புது தயாரிப்பாளர் என்று அனைத்து புதியவர்களையும் வைத்து வெற்றி பெற்றவன் நான் ஒருவன் தான் கடந்த 10 ஆண்டுகளில் (கர்வம் அல்ல). இந்த வருடம் 5 புதிய தயாரிப்பாளர்களையும் 5 புதிய கதாநாயகர்களையும் அறிமுகப்படுத்துகிறேன். ஏஞ்சலினா, ஜீனியஸ் என இரண்டு படங்கள் முடிவடைந்துள்ளன. கால்பந்தை வைத்து எடுக்கும் அடுத்தப் படம் - சாம்பியன். வேலை நிறுத்தம் முடிவடைந்தவுடன் தொடங்கும். மற்ற இரண்டு படங்களின் விவரங்களை விரைவில் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார். 

எனது மூன்றாவது படமான `சாம்பியன்' ஃபுட் பால் திரைப்படத்தை ஸ்ட்ரைக் முடிந்து துவங்க உள்ளேன். மற்ற இரண்டு படங்களின் அறிவிப்புகளை விரைவில் வெளியிடுகிறேன். இந்த வருடம் முழுக்க புதுமையான கதைக்களத்துடன் பயணிக்கப்போகிறேன். இதற்கு ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.