திரிணமூலை வேரோடு பறித்து வங்காள விரிகுடாவில் வீசுங்கள்! மமதா தொகுதியில் அமித் ஷா பேச்சு!
மமதா பானர்ஜி தொகுதியில் அமித் ஷா பிரசாரம் பற்றி...
திரிணமூல் காங்கிரஸ் கட்சியை வேரோடு பறித்து வங்காள விரிகுடாவில் வீசி எறிய மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை தெரிவித்தார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கிறது.
இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜியை எதிர்த்து பவானிபூர் தொகுதியில் போட்டியிடும் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சாலைவலமாக சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
”இந்த முறை யாரும் பயப்படத் தேவையில்லை. மேற்கு வங்க வாக்காளர்களை எந்தக் குண்டராலும் தடுத்து நிறுத்த முடியாது. திரிணமூல் காங்கிரஸை வேரோடு பறித்து வங்காள விரிகுடாவில் வீசியெறிய, மக்கள் அனைவரும் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும்.
இந்த முறை மேற்கு வங்கத்தில் நிச்சயம் மாற்றம் நிகழும், ஆனால், பவானிபூரில் அத்தகைய மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீகளா? இல்லையா?” எனக் கேள்வி எழுப்பினார்.