சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்....
சென்னை திருவிக நகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 6 கடைசி நாளாகும்.
அந்தவகையில் மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
Advertisement
Advertisement
அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், திருவிக நகர்(தனி) தொகுதியில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் திமுக சார்பில் கே.எஸ். ரவிச்சந்திரன் போட்டியிடுகிறார்.
முன்னதாக, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும் பொற்கொடியின் கணவருமான ஆம்ஸ்ட்ராங், 2024 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையும் தற்போது நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து, பகுஜன் சமாஜவாதி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பொற்கொடி நியமிக்கப்பட்டார். இருப்பினும், கட்சியில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக, கட்சியிலிருந்து பொற்கொடி நீக்கப்பட்ட நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் முதலாமாண்டு நினைவு தினமான ஜூலை 5-ல் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் பொற்கொடி.
பெரம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் அதிகம் உள்ளதாலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதன் மூலமாகவும் திருவிக நகர் தொகுதி பொற்கொடிக்கு சாதகமாக இருப்பதாகவே கூறப்படுகிறது. தனது கணவர் கொலைக்கு நீதி கோரி போட்டியிடுவதாகவும் பொற்கொடி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
Porkodi Armstrong Files Nomination in Chennai ThiruViKa Nagar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.