ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணையை எதிர்த்த தமிழ்நாடு அரசின் மனு வாபஸ்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விவகாரத்தில் சிபிஐ விசாரணையை எதிர்த்த மனுவை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றுள்ளதைப் பற்றி...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விவகாரத்தில் மத்திய குற்றப் புலனாய்வுத்துறை (சிபிஐ) விசாரணையை எதிர்த்த மனுவை தமிழ்நாடு அரசு புதன்கிழமை திரும்பப் பெற்றுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், பெரம்பூரில் அவரது வீட்டின் அருகே கடந்தாண்டு (2025) ஜூலை 5-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரௌடி நாகேந்திரன் அவரது மகன் அஸ்வத்தாமன் உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கின் முக்கிய குற்றவாளியான நாகேந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முறையான விசாரணை நடத்தப்படவில்லை எனக் கூறி, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கடந்தாண்டு உத்தரவிட்டது.
Advertisement
Advertisement
இந்த வழக்கை உயர் நீதிமன்ற தனி நீதிபதி சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டதை எதிர்த்து அப்போதைய ஆளுங்கட்சியான திமுக அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதனிடையே இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான அஸ்வத்தாமன், அஞ்சலை உள்ளிட்ட 14 பேருக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பிணை வழங்கியது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி காவல் துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றிய உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் திமுக அரசு தாக்கல் செய்திருந்த மனுவை, தற்போதைய ஆளுங்கட்சியான தவெக அரசு திரும்பப் பெறுவதாகத் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு காவல்துறை ஏற்கெனவே விரிவான விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதால், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை என அப்போதைய திமுக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
இதனையடுத்து தற்போதைய அரசின் நிலைப்பாடு குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், இந்த மேல்முறையீட்டு மனுவை தவெக அரசு திரும்பப் பெறுவதாகத் தெரிவித்துள்ளது.
The Tamil Nadu government withdrew its petition opposing a CBI probe into the Armstrong murder case on Wednesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.