கேரள வெள்ள நிவாரணம்: நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ. 1 கோடி நிதியுதவி!
கேரள வெள்ள நிவாரணத்துக்கு நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் ரூ. 1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்...
கேரள வெள்ள நிவாரணத்துக்கு நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் ரூ. 1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் கடும் மழை, வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 350 ஆக அதிகரித்துள்ளது 14 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
வரலாறு காணாத இயற்கைச் சீற்றத்தைச் சந்தித்து வரும் அம்மாநில மக்களுக்கு தமிழ்த் திரை உலகம் நேசக்கரம் கொடுத்து உதவி வருகிறது. தென்னிந்திய நடிகர் சங்கம், நடிகர்கள் ரஜினி காந்த், கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, தனுஷ். விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் நிதி வழங்கியுள்ளனர். நடிகர் விஜய் ரூ. 70 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.
இந்நிலையில் நடன இயக்குநராக இருந்து நடிகராகவும் இயக்குநராகவும் மாறியுள்ள ராகவா லாரன்ஸ், கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதியாக ரூ. 1 கோடி அளிக்கவுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
கேரள வெள்ள நிவாரணத்துக்காக ரூ. 1 கோடி நிதியுதவி அளிக்கவுள்ளேன். சனிக்கிழமையன்று கேரள முதல்வரைச் சந்திக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகச் சேவை செய்ய தன்னை அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப் போகிறேன் என்று கூறியுள்ளார்.