தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சீல்: வருவாய்த் துறையினர் நடவடிக்கை
சென்னை தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சீல் வைத்து வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை: சென்னை தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சீல் வைத்து வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகத்தைக் கண்டித்தும், அவர் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் கூறி தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் சென்னையில் புதனன்று போராட்டம் நடத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் இரு அலுவலகங்களுக்குத் தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் பூட்டு போட்டார்கள்.
தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்குப் போட்ட பூட்டை உடைக்க விஷால் வியாழன் காலை வந்தார். ஆனால் பூட்டை உடைக்கக் காவல்துறையினர் அனுமதி மறுத்தார்கள். பதிவுத்துறையினர் வந்து பூட்டைத் திறப்பார்கள் என்று காவலர்கள் விஷாலிடம் தகவல் தெரிவித்தார்கள். இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார் விஷால்.
Advertisement
எதிர்தரப்பினர் போட்ட பூட்டை உடைக்க அனுமதி மறுத்ததால் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விஷால் மற்றும் அவருடைய ஆதரவு தயாரிப்பாளர்கள் பலரும் காவல்துறையினரால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார்கள்.
கைது செய்யப்பட்ட விஷால் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். பின்னர் திடீர் திருப்பமாக கைதான் விஷால் மீது இரு பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. பின்னர் விஷால் வியாழன் மாலை விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சீல் வைத்து வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கிண்டி வட்டாட்சியர் ராம்குமார் தலைமையில் அதிகாரிகள் இணைந்து இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளனர். தயாரிப்பாளர் சங்கத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை முடிவுக்கு வரும் வரையில் அலுவலகம் சீல் வைக்கப்பட்டிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேசமயம் தயாரிப்பாளர் சங்க இரு தரப்பினரும் நாளை ஆர்.டி.ஓ விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.