தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள சிவகார்த்திகேயன், தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
தன் நெருங்கிய நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தைத் தயாரிக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றுள்ளது. படப்பிடிப்பும் நேற்று முதல் தொடங்கியுள்ளது.
சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - தினேஷ் கிருஷ்ணன், இசை - திபு நினன் தாமஸ். படத்தொகுப்பு - ஆண்டனி எல். ரூபன்.
கபாலி படத்தில் நெருப்புடா பாடல் மூலம் கவனம் பெற்ற அருண்ராஜா இயக்குநராக அறிமுகமாகும் படம் இது. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகவுள்ளது.
இதுகுறித்து ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
இயக்குநர் ஆகவேண்டும் என்றுதான் திரைத்துறைக்குள் நுழைந்தேன். நாளைய இயக்குநர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளேன். பிறகுதான் நடிப்பு, பாடலாசியர் என்று மற்ற பொறுப்புகளிலும் ஈடுபட்டேன். எனினும் இயக்குநராவதுதான் என்னுடைய ஆசை என்றார். இந்தக் கதையை சமீபத்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பைக்கு முன்பே எழுதிவிட்டதாகவும் இந்திய அணி இறுதிச்சுற்று வரை முன்னேறியதும் அதற்கு மக்கள் அளித்த ஆதரவும் தன் கதை மீதான நம்பிக்கையை மேலும் அதிகப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்தக் கதை மகள் - தந்தை உறவு குறித்து ஆழமாகப் பேசும் என்கிறார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் ஆனதற்கு அவருடைய நெருங்கிய நண்பர்களான அனிருத் உள்ளிட்ட பலரும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.