முகப்பு
செய்திகள்

சன் டிவிக்கு விஷால் கையொப்பத்துடன் அனுப்பப்பட்ட கடிதம் இதுதான்!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் விரைவில் சூர்யா நடிக்கவிருகிறார். இந்தப் படத்தில்

Updated On : 21 ஜனவரி, 2018 at 6:18 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:32 PM

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் விரைவில் சூர்யா நடிக்கவிருகிறார். இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார், அமிதாப்பச்சன் நடிக்க உள்ளதார் எனக் கூறப்படுகிறது. அந்தப் படத்தில் அமிதப்பச்சனுடன் இணைந்து சூர்யா நடிப்பதை கேலி செய்யும் விதத்தில் சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினிகள் இருவர் அமிதாப் உயரத்தையும் சூர்யாவின் உயரத்தையும் ஒப்பிட்டு, 'அமிதாப்புடன் சூர்யா நடிக்கும் போது ஸ்டூல் மீது ஏறி நின்று தான் நடிக்க வேண்டும்’ என்று கலாய்த்தனர்.

தொகுப்பாளினிகளின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சூர்யாவின் ரசிகர்கள் சிலர் சன் தொலைக்காட்சி நிறுவனம் முன்பு நேற்று (ஜனவரி 20) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து சூர்யா, 'தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துக் கொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்குச் செலவிடுங்கள். சமூகம் பயன் பெற’ என தனது டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், சன் டிவி நிறுவனத்துக்கு நடிகர்கள் சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

பிரபலங்கள் கருணாகரன், விஷால், விக்னேஷ் சிவன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நடிகர்கள் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் கையொப்பத்துடன் அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், 'சமீபத்தில் உங்களது சானலில் வெளியான சினிமா தொடர்பான நிகழ்ச்சியில் எங்கள் நடிகர் சங்கத்தின் மதிப்பிற்குரிய மூத்த உறுப்பினர் திரு.சூர்யாவின் உருவ அமைப்பைப் பற்றி கேலி செய்யும்விதமாக இரு இளம் பெண்கள் பேசிய தொகுப்பு வெளியானது. தனிப்பட்ட ஒருவரை பற்றி இதைப் போன்ற அநாகரிகமான தேவையற்ற விமர்சனங்கள் வெளியாவது உங்களைப் போன்ற சேனல்களுக்குப் பொருத்தமானது அல்ல.

Advertisement

சட்டத்தின்படி, சராசரி குடிமக்களை போல் ஒரு நடிகருக்கும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை, நாகரிகம், அடிப்படை மரியாதையுடன் கூடிய சம அளவிலான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே, மேற்கண்ட காட்சியை வெளியிட தங்களது நிறுவனம் அனுமதித்திருக்கக் கூடாது எனக் கருதுகிறோம்.

ஊடகத்துறையில் எங்களது நீண்டகால கூட்டாளி என்னும் வகையில் உங்களது சன் குழும நிகழ்ச்சிகளில் எங்களது பணிகளைப் பற்றிய எவ்வித விமர்சனங்களையும் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், எங்களது மூத்த உறுப்பினரும், மரியாதைக்குரிய நடிகருமான ஒருவரை காயப்படுத்தும் வகையில், அர்த்தமில்லாத இதைப்போன்ற நிகழ்ச்சிகளை நாங்கள் சகித்துக் கொள்ளவோ, மன்னிக்கவோ முடியாது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம். மேற்கண்ட நிகழ்ச்சி ஒளிபரப்புக்குக் காரணமானவர்கள்மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், இதுபோன்ற கசப்பான காட்சிகள் உங்களது குழுமத்துக்குச் சொந்தமான சானல்களில் இனி ஒளிபரப்பாகாது என்ற உத்தரவாதத்தை நீங்கள் அளிக்க வேண்டும். நமக்கிடையேயான உறவில் கறைபடியாத வகையில் உடனடியாக, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம்’ என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தனது திரைப்படம் தொடர்பான ஒரு நிகழ்ச்சிக்காக நடிகர் சூர்யா ஆந்திரா சென்றிருந்தார். நிகழ்ச்சியைத் முடித்து விட்டு சூர்யா தனது காரில் ஹோட்டல் நோக்கி சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது காரின் பின்னால் பைக்கில் வந்த ரசிகர்கள் அதி வேகத்தில் சூர்யாவின் காரை பின் தொடர்ந்திருக்கிறார்கள். இதனால் அதிருப்தியடைந்த சூர்யா தனது காரை நடு ரோட்டில் நிறுத்தி இறங்கி வந்து பைக்குகளில் பின்தொடர்ந்த ரசிகர்களைக் கண்டித்துள்ளார். பைக்கை வேகமாக ஓட்ட வேண்டாம் எனவும், அவர்களது உயிர் முக்கியம் எனவும் அறிவுரை கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.