கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் சபாஷ் நாயுடு மற்றும் அடுத்து அவர் நடிக்கவிருக்கும் இந்தியன்-2 ஆகிய இரண்டு பட வேலைகளில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இயக்குனர் ஷங்கர் கடந்த ஆண்டு இந்தியன்-2 பட அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் அவரது 2.0 ரிலீஸ் தள்ளிப் போனதால் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கவில்லை.
கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் சபாஷ் நாயுடு படத்தில் சுருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரம்மானந்தம், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பு 50 சதவிகிதம் முடிந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கமல்ஹாசன் தனது வீட்டு மாடிப் படியிலிருந்து தவறி விழுந்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் சபாஷ் நாயுடு பட வேலைகள் திடீரென்று நின்று விட்டன. சிகிச்சைக்குப் பிறகு நடிப்பார் என்று எதிர்ப்பார்த்த நிலையில், எதிர்பாராதவிதமாக படப்பிடிப்பு தள்ளிப் போனது. அதன்பிறகு கமலின் அரசியல் ஈடுபாட்டினால் தனிக் கட்சி தொடங்கி தீவிரமாக அதில் இறங்கிவிட்டார்.
நீண்ட காலமாக வெளிவராமல் இருந்த அவரது விஸ்வரூபம்-2 வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ள நிலையில், சபாஷ் நாயுடு, இந்தியன்-2 வையும் விரைவில் நடித்து முடிப்பார் என்று எதிர்ப்பார்க்கின்றனர் அவரது ரசிகர்கள். இந்நிலையில் கமல்ஹாசன் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் 2 வில் பிஸியாக இருப்பதால், இந்தப் படங்களுக்காக நேரம் ஒதுக்க அவரால் முடியவில்லை. பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை 100 நாட்கள் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதால், அதன் பிறகே இவற்றின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்று தெரிகிறது.