தமிழ்த் தயாரிப்பாளர் சங்கத்துக்கு மட்டும் இது பிரச்னையாக உள்ளது ஏன்?: கியூப் நிறுவனம் கேள்வி!
திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிராக, கடந்த 1 -ஆம் தேதி முதல்...
திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிராக, கடந்த 1 -ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடக் கூடாது என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தத்தின்படி, கடந்த மார்ச் 1 -ஆம் தேதி முதல் புதிய படங்கள் எதையும் திரையரங்குகளில் வெளியிடாமல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் மார்ச் 16 -ஆம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 'பெப்சி' அமைப்பின் ஒப்புதலுடன் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இதை அறிவித்துள்ளது. மார்ச் 16 முதல் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தம், சினிமா நிகழ்ச்சிகளும், போஸ்ட் புரொடெக்சன் பணிகளும் நடைபெறாது என தமிழக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்தார்.
இந்நிலையில் டிஜிட்டல் ஒளிபரப்பு தொடர்பாகத் தமிழ்த் திரையுலகில் நிலவும் பிரச்னைகள் குறித்து கியூப் நிறுவனத்தின் இணை நிறுவனர் செந்தில் குமார் ஒரு பேட்டியில் கூறியதாவது:
எங்களுடைய கட்டணம், தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு மட்டும் ஏன் பிரச்னையாக உள்ளது எனக் குழம்பிப் போயிருக்கிறோம். எங்களுடன் இணைந்துதான் பணிபுரிய வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்தவில்லை. எங்களுடனான ஒப்பந்தத்தில் அவர்களுக்குச் சம்மதம் இல்லையென்றால் மற்ற நிறுவனங்களுடன் இணைந்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் மூன்று புதிய நிறுவனங்கள் உருவாகியுள்ளன. ஒரு நிறுவனம் ஒரு வாரத்துக்கு ரூ. 15,000 கட்டணம் செலுத்தச் சொல்கிறது. நாங்கள் ஒரு படம் முழுவதுமாக ஓடிமுடிக்கவே அவ்வளவுதான் வாங்குகிறோம். சிறிய படங்களுக்கு ஒரு திரையரங்கத்துக்கு ரூ. 6000 மட்டுமே வாங்குகிறோம். மேலும் கடந்த 10 வருடங்களாக விபிஎஃப் கட்டணத்தை நாங்கள் உயர்த்தவேயில்லை என்று கூறியுள்ளார்.