டிவி தொடர்களை இயக்குவது கடினமானது: இயக்குநர் விக்ரமன் பேச்சு
ஒருகட்டத்தில், சரி ஒரு சீரியல் எடுத்துப் பார்போம் என்று முடிவெடுத்தேன். என்ன பயம் என்றால்...
சின்னத்திரை இயக்குநர்கள் சங்க ஆண்டு மலர் மற்றும் இணையத்தள தொடக்கவிழாவில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், பெஃப்சி கூட்டமைப்பின் தலைவர் ஆர்.கே. செல்வமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் இயக்குநர் விக்ரமன் பேசியதாவது:
பத்தாண்டுகளுக்கு மேலாக சின்னத்திரையில் நான் சீரியல்கள் இயக்கவேண்டும் என்று பல பிரபல சேனல்கள் மற்றும் தயாரிப்பாளர்களும் என்னை அணுகினார்கள். கதை, திரைக்கதை, மற்றும் வசனத்தை மட்டும் நான் செய்கிறேன். ஆனால் சீரியலை இயக்கமாட்டேன் என்று கூறிவிட்டேன். இப்பொது பெரிய திரையில் படம் இயக்கிக்கொண்டு இருக்கிறேன். நாம் சீரியல் செய்தால் விமரிசனங்கள் வரும் என்று பார்த்தேன். ஒருகட்டத்தில், சரி ஒரு சீரியல் எடுத்துப் பார்போம் என்று முடிவெடுத்தேன். என்ன பயம் என்றால் பெரிய திரையில் சாதித்ததைச் சின்னத்திரையில் செய்யமுடிவில்லை என்று இயக்குநர்கள் பேசுவார்கள். அதனால் பெரிய திரையிலும் சாதித்து சின்னத்திரையிலும் சாதித்த ஒருவரிடம் சென்று கேட்டேன்.
அதற்கு அவர் சொன்னார், இது திரைப்படம் எடுக்கும் அளவிற்கு சுலபம் கிடையாது. ஒரு மாதத்தில் முப்பது நாள் என்றால் அந்த முப்பது நாளும் வேலை இருக்கும். உங்களுக்கு மட்டும் இல்லை உங்கள் முழு குழுவிற்கும் எல்லா நாளும் வேலை இருக்கும் என்று சொன்னார். அப்போதுதான் புரிந்தது சின்னதிரையில் இருக்கும் கஷ்டங்கள். அதனால்தான் நான் கதை, திரைக்கதை, வசனம் மட்டும் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினேன். இந்தப் பணியை சிறப்பாக செய்துகொண்டு இருக்கும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இதற்காக எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று கூறினார்.