அண்மைக் காலமாகச் சமூக வலைதளங்களில் மீ டூ எனும் தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களையும், கொடுமைகளையும் பகிர்ந்து வருவது பரவலாகக் கவனத்தைப் பெற்று வருகிறது. குறிப்பாக, சில முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியுள்ளார். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து இயக்குநர் பாரதிராஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இலங்கையிலுள்ள கிளி நொச்சியில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றுக்கு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் பாரதிராஜா. பிறகு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மீ டூ தொடர்பான கேள்வியை எதிர்கொண்டவுடன் ஆவேசமடைந்தார் பாரதிராஜா. அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:
என்ன பிரச்னை, நீ பார்த்தியா, கேள்விப்பட்டியா, கேள்விப்பட்டதற்கு எல்லாம் பதில் சொல்லமுடியாது. என்னிடம் இதற்கு ஆதாரம் இருக்கிறது என்று சொல்லுங்கள். பதில் சொல்கிறேன். என்னிடம் வேறு எந்தக் கேள்வியும் கேட்காதீர்கள் என்று கோபமாகப் பதில் அளித்தார்.