எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்; தமிழ்நாட்டில் வேண்டாம்! கனிமொழி கடும் விமர்சனம்
எடப்பாடி பழனிசாமி குறித்து கனிமொழி கடும் விமர்சனம்...
அடுத்த ஜென்மத்தில் எடப்பாடி பழனிசாமி, தயவுசெய்து தமிழ்நாட்டில் பிறக்க வேண்டாம், அவர் வேண்டுமானால் குஜராத்தில் பிறந்துகொள்ளட்டும் என திமுக எம்.பி. கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று(ஏப். 21) காலை திமுக வேட்பாளரும் திமுக தெற்கு மாவட்டச் செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணனை ஆதரித்து வாக்கு சேகரித்த கனிமொழி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
Advertisement
பிரசாரக் கூட்டத்தில் பேசிய கனிமொழி,
"சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை மோடி அரசு தாக்கல் செய்து தோல்வியைச் சந்தித்தது. தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் இந்த மசோதாவை நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து கருப்பு நாள் என்று அறிவித்தார். தான் கொண்டு வந்த மசோதா தோல்வியடைந்துவிட்டது என்று பிரதமர் புலம்பிக்கொண்டிருக்கிறார்.
சரி, எடப்பாடி பழனிசாமிக்கு என்ன ஆயிற்று? தமிழ்நாட்டில் பிறந்து தமிழன் என்று கூறும் அவர், தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழப்பதை ஏற்றுக்கொள்ளும் இபிஎஸ், தான் அடுத்த ஜென்மத்தில் தமிழ்நாட்டு மக்களின் ஏதாவது ஒரு குடும்பத்தில் பிறக்க வேண்டுமென்று கூறுகிறார்.
எனக்கு அடுத்த ஜென்மத்தில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. அப்படியே அவர் பிறந்தாலும் தயவுசெய்து தமிழ்நாட்டில் பிறக்க வேண்டாம். அவர் வேண்டுமானால் குஜராத்தில் பிறந்துகொள்ளட்டும். ஏனென்றால் அங்கிருப்பவர்களுக்குத்தான் அவர் இப்போது கைகட்டி நின்று கொண்டிருக்கிறார். அதனால் அடுத்த முறை பிறந்தால் குஜராத்தில் பிறந்துகொள்ளட்டும்" என்று பேசினார்.