சமீபத்தில் நடிகர் அமீர்கான் ட்விட்டரில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து ‘என் ஃபேவரிட் ஆக்டரைப் பார்த்ததும், உடனே ஓடிப்போய் அவரோட செல்ஃபீ எடுத்துக்கிட்டேன்’ என்று சாமான்ய ரசிகரைப் போல குதூகலித்திருந்தார். அமீர்கான் பெரிய இண்டர்நேஷனல் ஸ்டார், அவரே செல்ஃபீ எடுத்துக் கொள்ள விரும்பும் ஆக்டர் என்றால் அவர் மிகப்பெரிய ஹாலிவுட் ஸ்டாராக இருக்க வேண்டும் என்று தான் எல்லோரும் நினைத்திருக்கக் கூடும். அது தான் இல்லை. அமீர் ஓடிப்போய் செல்ஃபீ எடுத்துக் கொண்டது டோலிவுட் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன்.
இருவரும் அவரவர் திரைப்படங்களின் படப்பிடிப்புக்காக ஜப்பான் சென்றிருந்த சென்றிருந்த வேளையில் திடீரென கியோட்டா விமானநிலையத்தில் அமீரின் பார்வையில் சிரஞ்சீவி பட்டிருக்கிறார். தூரத்தில் சிரஞ்சீவியைக் கண்டதுமே அமீருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. உடனே ஓடிச்சென்று அவரைச் சந்தித்துப் பேசியதோடு குதூகலமாக ஒரு செல்ஃபீயும் எடுத்து அதைத் தனது ட்விட்டர் தளத்திலும் பதிவிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பில் இருவரும் தங்களது வரவிருக்கும் திரைப்படங்கள் குறித்த செய்திகளையும் பகிர்ந்து கொண்டதாகத் தகவல். சிரஞ்சீவி தற்போது சுதந்திரப் போராட்ட வீரரான உய்யலவாட நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கைப் படத்தில் நரசிம்ம ரெட்டியாக நடித்து வருகிறார். சை ரா நரசிம்ம ரெட்டி என்ற பெயரில் தயாராகிக் கொண்டிருக்கும் இத்திரைப்படத்தில் அமிதாப் பச்சன், விஜய்சேதுபதி, நயன் தாரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் இயக்குனர் சுரேந்தர் ரெட்டி.