முகப்பு
செய்திகள்

ஆர்யா - நடிகை சயீஷா திருமணச் செய்தி 99% வதந்தி தான்: அபர்ணதி நம்பிக்கை!

ஆர்யாவிடம் கேட்கக்கூடாது. அவர் இதற்கு சீரியஸாகப் பதில் சொல்லமாட்டார். கேள்வி கேட்பவரைக் குழப்பிவிடுவார்... 

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:02 AM
பகிர்:

பிரபல பாலிவுட் நடிகர்களான சாயிரா பானு, திலீப் குமாரின் உறவினரான சயீஷா, தமிழில் வனமகன் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவின் ஜோடியாக நடித்த சயீஷாவுக்கு அவருடன் ஏற்பட்ட நட்பு, காதலாக மாறி, தற்போது திருமணமாக மலரவுள்ளது. இருவரும் தற்போது காப்பான் என்கிற கே.வி. ஆனந்தின் படத்திலும் நடித்துவருகிறார்கள்.

ஆர்யா (38) - சயீஷா (21) ஆகியோரின் காதல் திருமணம், ஹைதராபாத்தில் மார்ச் 10 அன்று இஸ்லாமிய முறைப்படி நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை இருவரும் இத்தகவலை உறுதி செய்யவில்லை. எனினும் சமூகவலைத்தளங்களில் ஆர்யா, சயீஷா ஆகிய இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகிறார்கள்.

இந்நிலையில் இந்தத் தகவல் வதந்தி என்று நடிகையும் ஆர்யா பங்கேற்ற எங்க வீட்டு மாப்பிள்ளை தொலைக்காட்சியில் நிகழ்சியில் போட்டியாளராகப் பங்கேற்று டாப் 5-யில் இடம்பெற்றவருமான அபர்ணதி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஆர்யாவின் திருமணச் செய்தி குறித்து அந்தப் பேட்டியில் அபர்ணதி கூறியதாவது:

ஆர்யாவின் திருமணச் செய்திகள் எல்லாம் 99% வதந்தி என்றே நினைக்கிறேன். இருவரும் அதிகாரபூர்வமாகச் சொல்லும்வரை நான் இந்தச் செய்திகளை நம்பமாட்டேன். விஷால் தன்னுடைய திருமணத்தை அறிவித்ததுபோல இருவரும் இந்தத் திருமணச் செய்தியை உறுதி செய்யவேண்டும். தகவல் உண்மையாக இருந்திருந்தால் அவர்களே சொல்லியிருப்பார்கள். எனவே இது வதந்தியாக இருக்கும் என்றே நம்புகிறேன். 

மேலும் இதுகுறித்த செய்தியை ஆர்யாவிடம் கேட்கக்கூடாது. அவர் இதற்கு சீரியஸாகப் பதில் சொல்லமாட்டார். கேள்வி கேட்பவரைக் குழப்பிவிடுவார். சாயிஷாவிடம் கேட்டால் மட்டுமே உண்மை தெரியவரும் என்று கூறியுள்ளார். 

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த வருடம் எங்க வீட்டு மாப்பிள்ளை என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் கலந்துகொண்ட 18 பெண்களில் நடிகர் ஆர்யா தனக்கு விருப்பமான பெண்ணைத் தேர்வு செய்யும் வகையில் நிகழ்ச்சி அமைந்தது. இதற்காக அந்தப் பெண்களுக்கு நடனம், பேஷன் ஷோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. கடைசி 5 பேரில் ஸ்வேதா, அபர்ணதி, சீதாலட்சுமி, சுசானா, அகதா ஆகியோர் இடம்பெற்றார்கள். பிறகு இறுதிச்சுற்றில் மூவர் இடம்பெற்றார்கள். மூன்று போட்டியாளர்களில் இருந்து ஒருவரைத் தன்னால் தேர்வு செய்ய முடியாது. எனக்கு இன்னும் சிறிது காலம் தேவைப்படுகிறது. ஒருவரை இப்போது தேர்வு செய்தால் மற்ற இருவரும் ஏமாற்றம் அடைவார்கள். இந்த மேடையில் மற்ற இருவரையும் நிராகரித்தால் அவர்களுடைய பெற்றோர்கள் வருத்தப்படுவார்கள் என்று ஆர்யா, இறுதியாகத் தன்னுடைய முடிவை அறிவித்தார். அதாவது, இந்த நிகழ்ச்சியின் மூலமாக தனக்கான ஜோடியைத் தேர்வு செய்ய அவர் மறுத்துவிட்டார். இந்நிலையில் தற்போது நடிகை சயீஷாவை ஆர்யா திருமணம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.