முகப்பு
செய்திகள்

ராஜராஜ சோழன் உயிருடன் இருந்திருந்தால் என்னுடைய விமரிசனத்தை ஏற்றுக் கொண்டிருப்பார்: பா. இரஞ்சித் பேச்சு

நான் பேசவில்லை என்று என் பேச்சை மறுக்கவில்லை. நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. இங்குதான் உள்ளேன்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:38 AM
பகிர்:

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருப்பனந்தாள் கடைத்தெருவில் ஜூன் 5ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திரைப்பட இயக்குநர் பா. இரஞ்சித் பங்கேற்று பேசுகையில், ராஜராஜ சோழனைப் பற்றி அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இப்பதிவு கட்செவி அஞ்சலில் பரவியதைத் தொடர்ந்து திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் இரஞ்சித் மீது போலீஸார் ஜூன் 10-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இரஞ்சித் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி,  கும்பகோணம் நீதிமன்றத்தில் 15 நாட்களுக்குள் இரு நபர் ஜாமீன் கொடுத்து ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறு உத்தரவிட்டார். இதன்படி, கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ரஞ்சித் செவ்வாய்க்கிழமை ஆஜரானார். விசாரணை நடத்திய நடுவர், இரு நபர் ஜாமீனை ஏற்று புதன்கிழமை முதல் 3 நாட்களுக்கு காலை 10.30 மணிக்கு திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் பா. இரஞ்சித் பேசியதாவது: 

ராஜராஜ சோழன் பற்றி நான் பேசியது எப்படிப் பார்க்கப்படுகிறது என்பது முக்கியமானது. இரஞ்சித் பேசுகிறபோது அது எப்படிப் பார்க்கப்படுகிறது, இரஞ்சித் அல்லாதவர்கள் பேசினால் எப்படிப் பார்க்கப்படுகிறது? இரஞ்சித் அல்லாதவர்கள் பேசும்போது அமைதியாக இருந்த உலகம், பொதுச் சமூகம், இரஞ்சித் பேசும்போது மட்டும் ஏன் விழிப்படைந்தது? கும்பகோணக் காவல்நிலையத்தில் நான் கையெழுத்திடச் சென்றபோது, உங்களுக்கு நிறைய மன உளைச்சலை உண்டுபண்ணிவிட்டார்களா என்று என்னிடம் நிருபர் கேட்டார். உண்மையில் இரஞ்சித் பேசியதால் மன உளைச்சல் அடைந்தவர்கள் தான் அதிகம் பேர். ராஜராஜன் உயிரோடு இருந்திருந்தால் என்னுடைய விமரிசனத்தைச் சத்தியமாக ஏற்றுக்கொண்டிருப்பார். சரி வா, நாம் இதுகுறித்து விவாதிக்கலாம் என்றிருப்பார். ஆனால் ராஜராஜனின் பேரன்கள் வெவ்வேறு சமூகத்தில் உள்ளார்கள். அந்தப் பேரன்கள் எல்லாம் மன உளைச்சல் அடைந்துவிட்டார்கள். 

அன்று நான் பேசிய 50 நிமிடங்களில் ராஜராஜன் குறித்து குறைந்த கால அளவே பேசினேன். இதர விஷயங்கள் குறித்து நீண்ட நேரம் பேசினேன். ஆனால் ராஜராஜன் பற்றிப் பேசியதைப் பரவலாக்கி சர்ச்சையை உண்டு பண்ணிய ஊடகங்களுக்கு நன்றி. குறிப்பாக, நீதிபதிகளுக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஏன் நிலம் இல்லை என்கிற விவாதம் தான் இது. ஒரு குறிப்பிட்டபகுதியினரிடம் நிலம் உள்ளது. என்னிடம் மட்டும் ஏன் இல்லை? எனில், நிலம் என்னிடமிருந்து எப்படிப் பிரிந்து போனது? என் ஆய்வுக்கு உட்பட்டு எனக்கு விளங்கிய செய்திகளின் அடிப்படையில் சிலவற்றைப் பேசியுள்ளேன். சில பேர் கேட்கிறார்கள், ஆமாம் இவர்கள் ஜமீன் பரம்பரை, இவர்களிடமிருந்து நிலம் எடுத்துவிட்டார்கள் என. தலித்துகளிடம் நிலமே இல்லை என்று இன்னொருவர் சொல்கிறார். தலித்துகளிடம் நிலமே இல்லை என்று எப்படி உன்னால் பேசமுடிகிறது? தலித்துகளிடம் நிலம் எப்படி இல்லாமல் போயிருக்கும்? எங்களிடமிருந்த நிலம் பல்வேறு காரணங்களால் பறிக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு காரணம் தான் அது. இவ்வளவு பிரச்னைகள் உள்ளன. இதைப் பற்றிப் பேசுவதற்குக் கூட அவர்கள் முன்வருவதில்லை. 

ஒரு தலித்தாக உள்ள நான் எழுப்பும் கேள்வி - உரையாடலை ஆரம்பிப்பதற்கு முன்பே எதிர்க்கவேண்டியதில்லை. நான் ஒரு குற்றச்சாட்டை வைக்கிறேன். அந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் சொல். பதில் சொல்வதற்குப் பதிலாக, உடனே குழுவாக மாறிவிடுகிறீர்கள். எது உண்மை என்பதிலேயே பிரச்னை உள்ளது. எது உண்மை? பெரும்பான்மையினர் ஆதரவு அளிப்பதுதான் உண்மை. எனில் சிறுபான்மையினர் பேசுவது உண்மை கிடையாதா? பலம் இல்லை என்றால் உண்மையில்லாததாக மாறுகிறது. பேசுபவரின் அடிப்படையில் ஒரு பிரச்னையைப் பார்ப்பது என்பது எவ்வளவு மோசமானது என்று இந்த நிகழ்விலிருந்து பார்த்துக்கொள்ளலாம். என் மீது வழக்கு தொடுத்ததால், நான் பேசவில்லை என்று என் பேச்சை மறுக்கவில்லை. இங்கேயும் சொல்கிறேன், நான் அப்படிப் பேசினேன். அதை நான் எதிர்கொள்கிறேன். நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. இங்குதான் உள்ளேன். நான் அம்பேத்கரைப் பின்தொடர்பவன். நான் யாருக்காகவும் பயப்படவேண்டிய அவசியமில்லை என்று பேசியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →