வேலை முடிந்தால் போய்விட வேண்டியதுதானே என்று இன்று காலையில் கூறியுள்ளார்: கிரேஸி மோகன் குறித்து எஸ்.வி. சேகர்
பாரதியார் போய்விட்டார், விவேகானந்தர் போய்விட்டார். நாமும் வேலை முடிந்தால் போய்விட வேண்டியதுதானே...
பிரபல நகைச்சுவை நாடக நடிகரும் புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் (1952 - 2019) மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 66.
இன்று காலை 11 மணி அளவில் கிரேஸி மோகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கவலைக்கிடமான நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் மதியம் 2 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்தது.
தனியார் மருத்துவமனைக்குச் சென்று கிரேஸி மோகனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் நடிகரும் நாடக ஆசிரியருமான எஸ்.வி. சேகர். பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
1% கூட ஆபாசம் இல்லாமல் நகைச்சுவை வசனங்கள் எழுதியவர், கிரேஸி மோகன். என்னுடைய நாடகத்தில் பங்கேற்று பிறகு அதன் மூலமாக கிரேஸி மோகன் என்கிற பெயரை அவர் பெற்றார்.
கடவுள் நம்பிக்கை உள்ளவர். நன்குப் படங்கள் வரைவார். வெண்பாக்கள் எழுதுவார். கூட்டுக் குடும்பத்தின் மீது நம்பிக்கை உள்ளவர். அவருடைய நாடகங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். சனி, ஞாயிறு என்றால் சென்னையில் கிரேஸி மோகனின் நாடகங்கள் இருக்கும்.
அவருடைய தம்பி மாது பாலாஜியிடன் பேசினேன். பாரதியார் போய்விட்டார், விவேகானந்தர் போய்விட்டார். நாமும் வேலை முடிந்தால் போய்விட வேண்டியதுதானே என்று கிரேஸி மோகன் இன்று காலையில் பேசியதாக அவர் சொன்னார். மிகப்பெரிய இழப்பு இது. இறுதிச்சடங்குகள் நாளை நடைபெறும் என்று கூறியுள்ளார்.