கேரளத்தில் பெண் முதல்வர் வேண்டும்: ராகுல் காந்தி
கேரளத்தில் பெண் வாக்காளர்களைக் கவரும் ராகுல்
கேரளத்தில் பெண் ஒருவர் முதல்வர் பதவியேற்க வேண்டும் என்ற ஆவல் தமக்கு இருப்பதாக ராகுல் காந்தி பிரசாரத்தில் பேசினார்.
கேரள தேர்தல் களத்தில் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், புதுப்பள்ளி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி பேசியதாவது, “கேரளத்தில் பெண் ஒருவர் முதல்வராக எப்போது ஆவாரோ? என்ற நாளை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். கேரள பெண்கள் தங்களின் கனவுகளை நிறைவேற்ற வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் என்னவெல்லாம் செய்ய நினைக்கிறார்களோ அவற்றிலெல்லாம் அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
அதன் ஒருபகுதியாக, எங்களது தேர்தல் வாக்குறுகளில் கேஎஸ்ஆர்டிசி பேருந்துகளில் மகளிர் கட்டணம் செலுத்தாமல் செல்லலாம் என்று அறிவிப்பும் உள்ளடக்கப்பட்டுள்ளது” என்றார்.
கேரளத்தில் இதுவரை பெண் தலைவர் ஒருவர்கூட முதல்வர் பதவியேற்றதில்லை. இந்நிலையில், இந்த முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவர்களில் 9 வேட்பாளர்கள் மட்டுமே பெண்களாவர். அவர்களுடன் கூட்டணியில் உள்ள புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து கே. கே. ராமாவும் பெண் வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.