மோடியின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு இடதுசாரி அரசு! பினராயி விஜயன் மீது ராகுல் விமர்சனம்
மோடியின் கட்டுப்பாட்டில் பினராயி விஜயன்..! - ராகுல் விமர்சனம்
கேரளத்தில் இடதுசாரி அரசைப் போல் ஆளுங்கட்சி செயல்படவில்லை என்று ராகுல் காந்தி கடுமையான விமர்சனங்களைச் சுமத்தியிருக்கிறார்.
கேரளத்தில் வரும் ஏப். 9-இல் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு, ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும் (எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் (யுடிஎஃப்) அதிகார நாற்காலிக்கான போட்டியில் முன்னிலை வகிக்கின்றன.
கேரள தேர்தல் களத்தில் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பத்தனம்திட்டா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி பேசியதாவது, “இடதுசாரி முன்னணி முழுக்க முழுக்க பாஜக ஆதரவுடன் செயல்படுகிறது. இடதுசாரி முன்னணி கேரளத்தில் ‘ஒரு இடதுசாரி முன்னணி’ போல செயல்படவில்லை. அவர்கள் ஒருபோதும், ஒரு இடதுசாரி அரசாக இல்லவேயில்லை; ஆனால், கார்ப்பரேட் நிதியுதவி பெறும் ஒரு அரசாக இருக்கின்றனர்.
இங்கு பாஜக ஆதரவுடன் உள்ள இடதுசாரி முன்னணியை எதிர்த்து தேர்தலில் நாங்கள் போராடுகிறோம். ஒருபக்கத்தில், ஐக்கிய ஜனநாயக முன்னணி, இன்னொரு பக்கத்தில் இடதுசாரி முன்னணி மற்றும் பாஜக இணைந்த அணி. கேரளத்தில் தேர்தலில் பாஜகவின் ஒரு ரகசிய கை ஓங்கி நிற்கிறது. அவர்கள் ஐக்கிய ஜனநாயக முன்னணி இங்கு வேண்டாமென விரும்புகிறார்கள். ஏனென்றால், இந்த நாட்டில் அவர்களுக்கு சவால் அளிக்கும் ஒரே சக்தி காங்கிரஸ் கட்சி என்பது அவர்களுக்கு தெரியும்.
பாஜகவுக்கு ஒன்று தெரியும். தாங்கள் மத்தியில் ஆட்சியில் இருந்தால், கேரளத்தில் எந்த இடதுசாரி அரசு அமைந்தாலும் அதை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம் என்பது அவர்களுக்கு தெரியும்.
இதற்கான முதல் ஆதாரம், பாஜகவை எதிர்ப்பவர்கள் அவர்களால் தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள். என் மீதே தாக்குதல் நடந்திருக்கிறதே, எனக்கெதிராக 36 வழக்குகள் உள்ளன. ஆனால், கேரள முதல்வர் மீது பாஜகவிலிருந்து எந்தவொரு தாக்குதலும் இல்லை.
எப்படி டொனால்ட் டிரம்ப்பால் நரேந்திர மோடி சமரசம் செய்துகொள்ளச் செய்யப்பட்டார் என்பது ஒவ்வொருவருக்கும் தெரிந்த விஷயமோ, அதைப்போல், நரேந்திர மோடி இங்குள்ள முதல்வரைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். பினராயி விஜயன் தாம் செய்த முறைகேடுகளால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறார்” என்றார்.