பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்ளவில்லை: ரமேஷ் திலக்
இது வதந்தி தான். நான் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்று கூறியுள்ளார்...
விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரு வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றும் நடிகர் கமல்ஹாசன் முதல்முறையாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள். முதல் வருட நிகழ்ச்சியில் ஆரவும் கடந்த வருட நிகழ்ச்சியில் ரித்விகாவும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டார்கள்.
பிக் பாஸ் 3 விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இந்நிகழ்ச்சியையும் கமல் ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். இதற்கான விளம்பரம் தொடர்பான படப்பிடிப்பு சமீபத்தில் சென்னை பூந்தமல்லியில் நடைபெற்றுள்ளது. அரசியல் கட்சி தொடங்கியுள்ளதால் இந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் கலந்துகொள்ளமாட்டார் என்று கூறப்பட்ட நிலையில் கமல் மீண்டும் பிக் பாஸ் தொகுப்பாளராகப் பணியாற்றவுள்ளார். இந்த வருட நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள். ஜூன் முதல் நிகழ்ச்சி ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ள நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகைகள் சாந்தினி தமிழரசன், லைலா, சாக்ஷி அகர்வால், சுதா சந்திரன், நடிகர்கள் மகேந்திரன், ரமேஷ் திலக் ஆகியோருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சித் தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், சாந்தினி தமிழரசன், தன்னை பிக் பாஸ் குழுவினர் அழைத்துள்ளதாகவும் எனினும் இறுதி முடிவை தான் கூறவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் ரமேஷ் திலக்கும் மறுப்பு தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்ளவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது வதந்தி தான். நான் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.