தன்மானத்துக்காக ரூ. 100 கோடி மதிப்புள்ள சொத்துக்களைத் தூக்கி எறிந்தேன்: வனிதா விஜயகுமார்
என்னுடைய குடும்பம் குறித்தும் என்ன நடந்தது என்று நன்கு அறிந்தவர்களுக்குமானப் பதிவு இது...
விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. விஜய் டி.வி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள்.
இந்நிலையில் பிக் பாஸ் பட்டத்தை வெல்லக் கூடியவர் என போட்டியாளர்களாலும் ரசிகர்களாலும் கருதப்பட்ட இலங்கைத் தமிழர் தர்ஷன், மக்களின் குறைந்த வாக்குகளைப் பெற்று போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த வாரத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைகிற நிலையில் இறுதிச்சுற்றுப் போட்டியாளர் என்கிற கெளரவத்தை அடையமுடியாமல் அவர் வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. பிக் பாஸ் போட்டியை வெல்லக்கூடியவர் என தர்ஷனைத் தானும் எண்ணியதாக கமல் கூறினார். பிறகு, இவ்வளவு ஆதரவு தரும் ரசிகர்களான நீங்கள் அவருக்கு வாக்களித்தீர்களா என அரங்கிலிருந்த பார்வையாளர்களிடம் கேட்டார். சமூகவலைத்தளங்களிலும் தர்ஷனின் வெளியேற்றத்தை நம்பமுடியாமல் பலரும் அவருக்கு ஆதரவாகப் பதிவுகளை எழுதினார்கள்.
தர்ஷனின் வெளியேற்றம் குறித்து ட்விட்டரில் சில பதிவுகளை வெளியிட்டார் நடிகை வனிதா விஜயகுமார். இவரும் சில வாரங்களுக்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். தர்ஷனின் வெளியேற்றம் குறித்த வனிதாவின் ட்வீட்களுக்குச் சிலர் பதில் அளித்துள்ளார்கள். அதற்கான பதிலாக வனிதா விஜயகுமார் வெளியிட்ட ட்வீட்:
Advertisement
என்னுடைய குடும்பம் குறித்தும் என்ன நடந்தது என்று நன்கு அறிந்தவர்களுக்குமானப் பதிவு இது. எனக்கான கண்ணியம், பெருமை, தன்மானம் ஆகியவற்றுக்காக ரூ. 100 கோடிக்கும் அதிகமான சொத்துக்களைத் தூக்கி எறிந்தேன். போலியாக உள்ள யாரிடமும் பணிந்துபோக மாட்டேன். எனக்கும் கடவுளுக்கும் உண்மையாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.