எஸ்.பி.பி.க்காகக் கூட்டுப் பிரார்த்தனை: ரஜினி, கமல், இளையராஜா, ரஹ்மானுக்கு பாரதிராஜா அழைப்பு
தங்களுக்குப் பிடித்த எஸ்.பி.பி.யின் பாடலை ஒலிக்கவிட்டு அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்யுமாறு...
செய்திகள்எஸ்.பி.பி.க்காகக் கூட்டுப் பிரார்த்தனை: ரஜினி, கமல், இளையராஜா, ரஹ்மானுக்கு பாரதிராஜா அழைப்பு
தங்களுக்குப் பிடித்த எஸ்.பி.பி.யின் பாடலை ஒலிக்கவிட்டு அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்யுமாறு...
பாடகர் எஸ்.பி.பி. உடல்நலம் பெற திரையுலகினரும் பொது மக்களும் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கடந்த 13-ஆம் தேதி நள்ளிரவில் திடீரென மோசமடைந்தது. இதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அவா் மாற்றப்பட்டாா். செயற்கை சுவாசம், எக்மோ போன்ற உயிா் காக்கும் மருத்துவத் தொழில்நுட்பத்தின் வாயிலாக அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் பயனாக எஸ்.பி.பி.யின் உடல்நிலை சற்று சீரடைந்ததாகவும், ரத்த அழுத்தம் சரியான அளவை எட்டியதாகவும் கூறப்பட்டது.
ஆனால் அவா் மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நேற்று தெரிவித்தது. அவரது உடலின் முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளை மருத்துவக் குழுவினா் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளது. எஸ்.பி.பி. பூரண நலம் பெற்று மீண்டு வர வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனா்.
இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து அவருடைய மகன் எஸ்.பி. சரண் நேற்று தகவல் தெரிவித்ததாவது: நேற்றைய நிலையே இன்றும் தொடர்கிறது. செயற்கை சுவாசம் எஸ்.பி.பி.க்கு அளிக்கப்படவில்லை என்கிற வதந்தி பரவியுள்ளது. அது உண்மையல்ல. அது விரைவில் நடக்க வேண்டும் என்று நாங்களும் விரும்புகிறோம். அவருக்குச் செயற்கை சுவாசம் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய உடல்நிலையை மருத்துவக் குழுவினா் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள். உங்கள் பிரார்த்தனைகள் எங்களுக்கும் அவருக்கும் உதவுகின்றன. எனவே தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள் என்றார்.
இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
எஸ்.பி.பி.யின் நிலையைக் கண்டு அனைவரும் வேதனை அடைவதைப் பார்த்து நெஞ்சம் பதறுகிறது. இயற்கை அன்னையைப் பிரார்த்திக்கும் வகையில் இளையராஜா, ரஜினிகாந்த், கமல் ஹாசன், வைரமுத்து, ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அனைத்து நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், பெப்சி அமைப்பினர், ஊடகக் கலைஞர்கள் மற்றும் உலகமெங்கும் உள்ள இசை ரசிகர்கள் அனைவரும் வியாழன் அன்று (ஆகஸ்ட் 20) இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தங்களுக்குப் பிடித்த எஸ்.பி.பி.யின் பாடலை ஒலிக்கவிட்டு அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கூட்டுப் பிரார்த்தனைக்கு உலகமெங்கும் வாழும் மக்களை அன்புடன் அழைக்கிறேன் என்று கூறியுள்ளார்.