சிம்புவால் எனக்கு லட்சக்கணக்கான சகோதரர்கள் கிடைத்துள்ளார்கள்: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
எத்தனை தடைகள் வந்தாலும் அதைக் கடந்து மாநாடு படத்தை வெற்றிப்படமாகத் தருவதே....
சிம்புவால் எனக்கு ஏராளமான சகோதரர்கள் கிடைத்துள்ளார்கள் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், பாரதிராஜாவின் மகன் மனோஜ், பிக் பாஸ் டேனியல், ஒய்.ஜி. மகேந்திரன் போன்றோர் நடிக்கிறார்கள். இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு - ரிச்சர்ட் எம். நாதன். இப்படத்தில் முதல்முறையாக இஸ்லாமிய இளைஞராக, அப்துல் காலிக் என்கிற வேடத்தில் நடிக்கிறார் சிம்பு.
சமீபத்தில் தனது பிறந்த நாளை சுரேஷ் காமாட்சி கொண்டாடினார். சிம்பு ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.
இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பிறந்த நாளை மிகச் சிறப்பாக்கிய சிம்பு ரசிகர்களுக்கு நன்றி. மாநாடு படத்தை சிம்புவுடன் தொடங்கினேன். இன்று அவர் எனக்குப் பரிசளித்திருப்பதோ லட்சக்கணக்கான சகோதரர்களை.
மாநாடு படம் நம் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை அறிவேன். எத்தனை தடைகள் வந்தாலும் அதைக் கடந்து மாநாடு படத்தை வெற்றிப்படமாகத் தருவதே நான் செய்யும் பதில் நன்றியாக இருக்க முடியும். இணைந்தே வெல்வோம் என்று கூறியுள்ளார்.