முகப்பு
செய்திகள்

மன்னிப்பு கேட்க முடியாது என்று சொன்ன ரஜினிக்கு ஷோபனா ரவி பாராட்டு!

பிரபல செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவி, ரஜினியின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்

Updated On : 22 ஜனவரி, 2020 at 2:45 PM
பகிர்:

சென்னையில் அண்மையில் நடைபெற்ற ‘துக்ளக் 50’-ம் ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்ற நடிகா் ரஜினிகாந்த், சேலத்தில் 1971-ல் பெரியாா் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியின்போது, ராமா் மற்றும் சீதையின் உடைகள் இல்லாத படங்கள் எடுத்து வரப்பட்டன. அவற்றுக்குச் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது. இந்தச் செய்தியை ‘துக்ளக்’ இதழ் தைரியமாக வெளியிட்டது என்று கூறினாா்.

ரஜினியின் இந்தக் கருத்து பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ரஜினிகாந்த் கூறுவது போன்ற சம்பவம் 1971 பேரணியில் நடைபெறவில்லை. எனவே, தனது கருத்துக்கு ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அவா் மன்னிப்புக் கேட்கும் வரை அவருடைய போயஸ் தோட்ட இல்லத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் எனவும் பெரியாா் இயக்கங்கள் அறிவித்தன.

இந்நிலையில், சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளா்களை நடிகா் ரஜினிகாந்த் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். அப்போது தனது கருத்துக்கு ஆதாரமாக தனியாா் பத்திரிகை ஒன்றைக் காண்பித்து, கற்பனையாகவோ, இல்லாத விஷயத்தையோ நான் கூறவில்லை. இந்தப் பத்திரிகையில் 2017-ல் வெளிவந்த செய்தியில் ராமா், சீதை படங்கள், செருப்பு மாலை அணிவித்து கொண்டுவரப்பட்ட செய்தி இடம்பெற்றிருக்கிறது. இதுபோன்ற பத்திரிகைகளில் வெளிவந்த தகவல், நான் கேள்விப்பட்ட தகவல்களின் அடிப்படையில்தான் அந்தக் கருத்தைத் தெரிவித்தேன். இல்லாத ஒன்றைக் கூறவில்லை. எனவே, இந்தக் கருத்துக்காக நான் மன்னிப்புக் கேட்கவோ அல்லது வருத்தம் தெரிவிக்கவோ முடியாது. இது மறுக்க வேண்டிய சம்பவம் இல்லை. மறக்க வேண்டிய சம்பவம் எனக் கூறினாா்.

Advertisement

இந்நிலையில் பிரபல செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவி, ரஜினியின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக்கில் அவர் கூறியதாவது:

வாழ்த்துகள் ரஜினி. நீங்கள் பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை. ஆமாம், கடவுள் ராமர் மற்றும் சீதை அவமானப்படுத்தப்பட்டார்கள். ராமர், சீதைக்குச் செருப்பு மாலை அணிவிக்கும் வரை அவர்கள் சென்றது இன்றும் என்னைக் காயப்படுத்துகிறது. துக்ளக்கில் வெளிவந்த புகைப்படங்கள் இன்னமும்  நினைவில் உள்ளன. அந்த இளம் வயதிலும் இது என்னை அச்சுறுத்தியது. அப்படி நான் உணர நான் சங்கியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. கடவுள் ராமருக்காகப் பேசவில்லையென்றால் வேறு யாருக்காகப் பேசமுடியும்? பணிந்து போகாதீர்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.