தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் மார்ச் 31 வரை நிறுத்தப்படப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 116 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 6,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 100 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்த் திரைப்படப் படப்பிடிப்புகள் மார்ச் 19 முதல் மார்ச் 31 வரை நிறுத்தப்படப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நடந்த ஃபெப்சி கூட்டத்தில் கரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் ரஜினி நடிக்கும் அண்ணாத்த, அஜித் நடிக்கும் வலிமை உள்ளிட்ட 75 தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட வாய்ப்புகள் உள்ளன.
ஏற்கெனவே கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஹிந்திப் படப்பிடிப்புகள் மார்ச் 19 முதல் மார்ச் 31 வரை நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல தெலுங்கு, மலையாளப் படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.