போலி ஆவணத்துடன் இந்தியாவில் குடியேறிய பாகிஸ்தானியர் கைது!
உத்தரப் பிரதேசத்தில் சட்டவிரோதமாகக் குடியேறிய பாகிஸ்தான் நபர் கைது செய்யப்பட்டது குறித்து...
உத்தரப் பிரதேசத்தில் சட்டவிரோதமாகக் குடியேறியதற்காக பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் வியாழக்கிழமை (ஏப்.24) கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசம், புலந்தஷார் பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்ததாகக் கூறப்படும் பாகிஸ்தான் நாட்டவர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். போலியான அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (ஏப்.24) தெரிவித்தனர்.
குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில், நடத்தப்பட்ட சோதனையின்போது, இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் நியூ கராச்சியைச் சேர்ந்த வசித் இர்ஷாத் என்பவரே குற்றம் சாட்டப்பட்டவர் என காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.
Advertisement
அவரது தாயார் பில்கிஸ் ஃபாத்திமாவுக்கு நீண்ட கால விசா வழங்கப்பட்டதாகவும், ஆனால் அவர் 2012 ஆம் ஆண்டு இறந்துவிட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட இர்ஷாத் நீண்ட கால விசாவுக்கும் விண்ணப்பித்திருந்த நிலையில், அது இன்னும் பரிசீலனையில் உள்ளது. மேலும், வேறொரு நபரின் போலி அடையாளத்தில் ஆதார் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் கடவுச்சீட்டு ஆகியவற்றை இர்ஷாத் வைத்திருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், குற்றம் சாட்டப்பட்டவர் காவலில் எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.