செய்திகள்

அவதூறு செய்திகளுக்கு எதிராகக் கொதித்தெழுந்த விஜய் தேவரகொண்டா! தெலுங்குத் திரையுலகம் ஆதரவு!

கிசு கிசு தளங்களால் இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் எனப் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

DIN

அவதூறு செய்திகளை வெளியிடும் இணையத்தளங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்கிற தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவின் கோரிக்கைக்குப் பிரபல தெலுங்கு நடிகர், நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 2 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 46,400 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

தெலுங்கு நடிகர்கள் பலரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளைச் செய்து வருகிறார்கள். சமீபத்தில் தன்னுடைய தேவரகொண்டா அறக்கட்டளையின் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தார் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா. உதவி தேவைப்படுபவர்கள் தன்னுடைய இணையத்தளத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவித்திருந்தார். தன்னுடைய பங்காக ரூ. 25 லட்சத்தையும் நிதி திரட்டியதன் மூலம் ரூ. 75 லட்சத்தையும் கொண்டு 7500 குடும்பங்களுக்கு உதவியுள்ளார்.

இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவின் நிவாரண உதவிகள் குறித்து ஆந்திர இணையத்தளம் ஒன்றில் அவதூறான செய்திகள் வெளியாகின. இதை எதிர்த்து விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜய் தேவரகொண்டா. அதில் அவர் கூறியுள்ளதாவது:

இரு நாள்களுக்கு முன்பு என்னிடம் பேட்டி கேட்டார்கள். மறுத்ததால் இந்த விளைவுகள்.

கிசுகிசு தளங்கள் சமூகத்தின் கேடாகும். கிசு கிசு தளங்களால் இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் எனப் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு வாசகனும் அதனால் பாதிக்கப்பட்டுள்ளான். நானும் தான். நம்மைப் பயன்படுத்திக்கொண்டு தவறான செய்திகளை வெளியிடுகிறார்கள். நம்மைப் பற்றி தவறான கருத்துகளை உருவாக்கி பணம் ஈட்டுகிறார்கள்.

இப்போது நிவாரணப் பணிகள் குறித்தும் தவறாக எழுதியுள்ளார்கள். என்னுடைய நன்கொடைகளைப் பற்றிக் கேட்பதற்கு நீங்கள் யார்? இது உழைத்து சம்பாதித்த பணம். என்னுடைய விருப்பத்தின் பேரில் வழங்குகிறேன். எங்கள் துறையைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறீர்கள். உங்களுடைய இணையத்தளங்களில் நாங்கள் விளம்பரம் தரவேண்டும். இல்லாவிட்டால் பட விமரிசனத்தில் ரேட்டிங்கைக் குறைத்து விடுவதாக மிரட்டுவீர்கள். நீங்கள் பேட்டி கேட்டால் தரவேண்டும். இல்லாவிட்டால் எங்களைப் பற்றி தவறாக எழுதுவீர்கள். மக்கள் இதுபோன்ற போலியான ஊடகங்களை நம்பாமல் நேர்மையான ஊடகங்களை நம்புங்கள் என்று தனது கோபத்தை விஜய் தேவரகொண்டா வெளிப்படுத்தியுள்ளார்.

விஜய் தேவரகொண்டாவின் இந்த வேண்டுகோளுக்கு ஒட்டுமொத்த தெலுங்குத் திரையுலகமும் ஆதரவு தெரிவித்துள்ளது. பொறுப்பில்லாத செய்திகளால் நானும் எனது குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளோம். நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக நிற்கிறோம் என்று தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார் மூத்த நடிகர் சிரஞ்சீவி. போலியான இணையத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரபல நடிகர் மகேஷ் பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார். ராணா டக்குபதி, காஜல் அகர்வால், ராஷி கண்ணா, ரவி தேஜா, ராணா, ராதிகா சரத் குமார், சார்மி, அல்லரி நரேஷ் போன்ற பிரபலங்களும் விஜய் தேவரகொண்டாவின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பு தீர்ப்பு எதிரொலி: சென்செக்ஸ் 479.95 புள்ளிகள் உயர்வு!

த்ரிஷ்யம் - 3 மோகன்லால் போஸ்டர்!

தவெக வார்டு செயலாளர்... தாய் கிழவி டிரைலர்!

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

SCROLL FOR NEXT