தன் நிறுவனம் தயாரிக்கும் மூன்று படங்களின் ஊழியர்களுக்கும் முழு சம்பளம் அளித்த விஷ்ணு விஷால்!
விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் மூன்று படங்களின் ஊழியர்களுக்கும் முழுச் சம்பளம் அளித்து பாராட்டு பெற்றுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.
விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் மூன்று படங்களின் ஊழியர்களுக்கும் முழுச் சம்பளம் அளித்து பாராட்டு பெற்றுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 2 லட்சத்து 58 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 49,300 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பெப்சி சங்க தொழிலாளா்கள் பிரச்னையைச் சந்தித்து வருவதைச் சுட்டிக்காட்டி, அவா்களுக்கு உதவ நடிகா்கள் முன்வர வேண்டுமென அந்தச் சங்கத்தின் தலைவா் ஆா்.கே. செல்வமணி வேண்டுகோள் விடுத்திருந்தாா். இதையடுத்து பெப்சி அமைப்புக்குப் பல்வேறு நடிகர்களும் உதவி செய்தார்கள். ஆனாலும் இந்த நிவாரணம் போதுமானதாக இல்லை என செல்வமணி மீண்டும் உதவி கோரியுள்ளார்.
இதையடுத்து திரைப்படப் படப்பிடிப்பு இல்லாமல், ரீ ரெக்காா்டிங், டப்பிங் உள்ளிட்ட பணிகளுக்கும், தொலைக்காட்சி படப்பிடிப்புக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ‘பெப்சி’ (தென்னிந்திய திரைப்பட தொழிலாளா் சம்மேளனம்) தலைவா் ஆா்.கே. செல்வமணி தமிழக முதல்வருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷாலின் படத் தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் மூன்று படங்களைத் தற்போது தயாரித்து வருகிறது. இந்த மூன்று படங்களின் படப்பிடிப்புகளும் இன்னமும் முடிவடையாத நிலையில் கரோனா ஊரடங்கால் பாதிப்புக்கு ஆளாகியுள்ள அப்படங்களின் தொழில்நுட்பக் கலைஞர்கள், ஊழியர்களுக்கான முழு சம்பளத்தையும் இப்போதே தந்து உதவியுள்ளார் விஷ்ணு விஷால்.
இதுபற்றி இயக்குநர் அருண் வைத்தியநாதன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். மூன்று படங்களின் ஊழியர்களுக்கும் முழு சம்பளத்தையும் தந்து உதவியுள்ளார் விஷ்ணு விஷால். கரோனா பாதிப்பால் அவருடைய படங்களின் நிலை பற்றி உறுதியாகத் தெரியாத நிலையில் அனைவரும் முழு சம்பளத்தையும் தந்துள்ளார். தர்மம் வீட்டிலிருந்து தொடங்குகிறது. விஷ்ணு விஷாலின் செயல் ஊக்கமளிக்கிறது என்று கூறியுள்ளார்.
விஷ்ணு விஷாலின் இந்த நடவடிக்கைக்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.