நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் அதிகச் சம்பளம் பெறவேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தியுள்ளார் நடிகை தமன்னா.
ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
தன்னுடைய மதிப்பைக் கொண்டு சம்பளம் நிர்ணயிப்பது என்பது நடிகையின் தனிப்பட்ட உரிமை. இதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை.
அதிகச் சம்பளம் பெற நடிகைகள் தகுதியானவர்கள் கிடையாது என்கிற புரிதலைத் தகர்க்க வேண்டும். ஒரு நடிகர் அதிகச் சம்பளம் பெறும்போது ஏன் இந்தக் கேள்வி கேட்கப்படுவதில்லை. தன்னுடைய நிலையை அடைய திரைத்துறையில் நடிகைகளும் கடினமாக உழைக்கிறார்கள். ஒரு படம் வெற்றி பெற நடிகர் எப்படித் தேவையோ அதேபோலத்தான் நடிகையும் தேவை. அதிகச் சம்பளம் பெறுபவர் என்கிற கெளரவம் நடிகர்களைப் போல நடிகைகளுக்கும் ஏன் கிடைக்கக் கூடாது? அல்லது அது நடிகர்களுக்கான உரிமை மட்டும்தானா? புதிய அணுகுமுறை வந்தால் மட்டுமே மாற்றம் காணமுடியும் என்று கூறியுள்ளார்.