தாராவி மக்களுக்கு உதவுங்கள்: பிரபல பாலிவுட் நடிகர் கோரிக்கை
தாராவி பகுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 54 ஆயிரத்துக்கும் அதிகமானோா் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இம்மாநிலத்தில் இதுவரை 1,700 பேருக்கும் அதிகமாக உயிரிழந்துள்ளனா். மும்பையில் மட்டும் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக அறியப்படும் மும்பை தாராவியில் 8 லட்சம் தமிழா்கள் வசித்து வருகிறாா்கள். இவா்களில் பெரும்பாலானோா் தொழிலாளா்களாகவும், சிறு வியாபாரிகளாகவும் உள்ளனா்.
தாராவியில் மக்கள் தொகை அடா்த்தி அதிகமாக உள்ளது. குறைந்த பரப்பளவில் திரளான மக்கள் வசித்து வருவதால், இங்கு தனிநபா் இடைவெளி என்பது சாத்தியமற்றதாக உள்ளது. இதனால் இங்கு கரோனா தொற்று எளிதில் பரவி வருகிறது. தாராவி பகுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
இந்நிலையில் தாராவி மக்களுக்கு அனைவரும் உதவவேண்டும் என பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் கூறியுள்ளார். அவருடைய பதிவில் எழுதியுள்ளதாவது:
கரோனா வைரஸ் பாதிப்பில் தாராவி பகுதி மையமாக உள்ளது. மளிகைப் பொருள், பாதுகாப்பு உபகரணங்களை மும்பை மாநகராட்சியின் ஆதரவுடன் பலரும் அறக்கட்டளைகளின் வழியாக வழங்கி வருகிறார்கள். நாங்கள் ஏடிஎஃப்எஃப் மூலமாக 700 குடும்பங்களுக்கு உதவி வருகிறோம். அனைவரும் நிதித்தொகை அளித்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.