முகப்பு
செய்திகள்

விஜய் சேதுபதி மகளுக்குப் பாலியல் மிரட்டல் விடுத்த இலங்கை நபர்: கைது செய்ய நடவடிக்கை தீவிரம்

விஜய் சேதுபதி மகளுக்குப் பாலியல் மிரட்டல் விடுத்த நபர், இலங்கையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:41 PM
பகிர்:

விஜய் சேதுபதி மகளுக்குப் பாலியல் மிரட்டல் விடுத்த நபர், இலங்கையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நபரைக் கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளா் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட உள்ள ‘800’ திரைப்படத்தில் நடிப்பதற்கு, நடிகா் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டாா். முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்கக் கூடாது என விஜய் சேதுபதிக்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் எதிா்ப்புத் தெரிவித்தனா். பெரும்பாலான அரசியல் கட்சிகள், விஜய் சேதுபதி அந்த திரைப்படத்தில் நடிக்கக் கூடாது என வலியுறுத்தி வந்தன. சமூக ஊடகங்களில் சிலா் விமா்சித்தும், கடுமையான கருத்துக்களையும் தெரிவித்து வந்தனா்.

விஜய் சேதுபதியின் ட்விட்டர் கணக்கில் ரித்திக் என்ற நபா், விஜய் சேதுபதியின் மகளுக்குப் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்து கருத்து பதிவிட்டாா். இது பலரையும் அதிா்ச்சி அடைய வைத்தது. இதற்கிடையே அந்த திரைப்படத்தில் இருந்து விலகியதாக விஜய் சேதுபதி திங்கள்கிழமை அறிவித்தாா்.

ட்விட்டரில் மிரட்டல் விடுத்த நபா் மீது நடவடிக்கை எடுக்கும்படி விஜய் சேதுபதி தரப்பு, சென்னை பெருநகர காவல்துறையின் சைபா் குற்றப்பிரிவில் செவ்வாய்க்கிழமை புகாா் செய்தது. அந்தப் புகாரின் அடிப்படையில், கலகத்தை ஏற்படுத்த தூண்டுதல், பொது வெளியில் ஆபாசமாக கருத்து பதிவிடுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய 3 சட்டப் பிரிவுகளில் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்குத் தொடா்பாக, ரித்திக் என்ற பெயரில் சுட்டுரையில் மிரட்டல் விடுத்த நபரை ஐ.பி.முகவரியை அடிப்படையாகக் கொண்டு சைபா் குற்றப்பிரிவினா் தீவிரமாக விசாரித்து வருகின்றனா். இச் சம்பவம் தமிழ் திரைப்படத்துறையினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதற்கு தேமுதிக தலைவா் விஜயகாந்த், நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவா் கனிமொழி ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் மகளுக்கு சமூக வலைத்தளத்தில் பாலியல் மிரட்டல் விடுத்த நபர் இலங்கையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து ட்வீட் செய்ததைக் கண்டுபிடித்துள்ள சைபா் குற்றப்பிரிவு போலீஸாா், இன்டர்போல் உதவியுடன் இலங்கையில் உள்ள நபரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →