போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகை ரியாவுக்கு ஜாமீன் மறுப்பு
போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகை ரியாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகை ரியாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக ரியா சக்ரவர்த்தியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அதேவேளையில் சுஷாந்த்தின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை சட்டவிரோதமாக கைமாற்றியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பணமோசடி வழக்குப்பதிவு செய்து அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே ரியாவுக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக அவரின் செல்லிடப்பேசி உரையாடல்கள் மூலம் தெரியவந்தது. இதுதொடர்பாக என்சிபி அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அவரிடம் 2 நாள்களாக விசாரணை நடத்தி வந்தனர். மும்பையில் உள்ள என்சிபி அலுவலகத்தில் 3-ஆவது நாளாக அவர் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.
Advertisement
இதுதொடர்பாக ரியாவின் வழக்குரைஞர் கூறுகையில், "தனக்கு இருந்த மனநல பிரச்னைகளுக்கு சட்ட விரோதமாக உட்கொண்ட மருந்துகள், போதைப்பொருள் பயன்படுத்தி வந்தது ஆகியவற்றால்தான் சுசாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டார். ஆனால் இந்த சம்பவத்தில் ரியா கைது செய்யப்பட்டுள்ளார். இது முற்றிலும் நீதிக்கு புறம்பானது' என்று தெரிவித்தார்.
போதைப்பொருள் விநியோகம் தொடர்பான குற்றச்சாட்டில் ரியாவின் சகோதரர் ஷோவிக், சுசாந்த்தின் மேலாளர் சாமுவல் மிராண்டா ஆகியோரை என்சிபி அதிகாரிகள் ஏற்கெனவே கைது செய்தனர்.
இந்நிலையில் போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகை ரியா, அவருடைய சகோதரர் மற்றும் நான்கு பேருக்கும் ஜாமீன் வழங்க மும்பை சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.