அருணாச்சல் முதல்வருக்கு எதிராக முறைகேடு புகார்! சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!
அருணாச்சல் முதல்வருக்கு எதிராக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது பற்றி...
அருணாச்சல் பிரதேசத்தின் முதல்வர் பெமா காண்டுவுக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015 முதல் 2025 வரையிலான 10 ஆண்டுகளில் பொதுப் பணித்துறை ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. சுமார் ரூ. 1,270 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை முதல்வர் பெமா காண்டுவின் குடும்பத்தினருக்கு தொடர்புடைய நிறுவனங்களுக்கு சாதகமாக வழங்கப்பட்டதாக தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு அளித்தது.
இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வாதிடப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் உள்ளிட்டோரின் வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு, தீர்ப்பின் தேதியை ஒத்திவைத்திருந்தது.
இந்த நிலையில், அருணச்சல் முதல்வருக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரிக்க திங்கள்கிழமை காலை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், “2015 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட மற்றும் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். ஒரு வாரத்துக்குள் விசாரணையைத் தொடங்கி,16 வாரங்களுக்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
அருணாச்சல் அரசு சிபிஐக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சிபிஐ-க்கு உதவ ஒரு ஒருங்கிணைப்பாளரை அருணாச்சல் தலைமைச் செயலாளர் நியமிக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான ஆவணங்களை குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் வழங்க வேண்டும்” என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.