பூனம் பாண்டே கணவருக்கு ஜாமீன்
சாம் பாம்பே மீது வழக்குப்பதிவு செய்த கோவா காவல்துறை அவரைக் கைது செய்தது...
நடிகை பூனம் பாண்டேவைத் தாக்கிய வழக்கில் கைதான கணவர் சாம் பாம்பேவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகை பூனம் பாண்டே தனது காதலர் சாம் பாம்பேவை செப்டம்பர் 10 அன்று திருமணம் செய்தார்.
இந்திய அணி 2011 உலகக் கோப்பையை வென்றபோது சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி கவனம் ஈர்த்தவர் பூனம் பாண்டே. 2013-ல் நாஷா படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். இதுவரை ஐந்து படங்களில் நடித்துள்ளார்.
Advertisement
கடந்த ஜூலை மாதம் நடிகை பூனம் பாண்டே - சாம் பாம்பே ஆகியோருக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இம்மாதத் தொடக்கத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஏழேழு ஜென்மமும் உன்னுடன் வாழ வேண்டும் என்று குறிப்பிட்டுத் திருமணப் புகைப்படங்களை பூனம் பாண்டே பகிர்ந்தார்.
திருமணமான இரு வாரங்களில் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார் பூனம் பாண்டே. கணவர் சாம் பாம்பே தன்னைத் தாக்கியதாகவும் பாலியல் ரீதியாகத் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் அச்சுறுத்தியதாகவும் புகாரில் கூறினார். படப்பிடிப்புக்காக பூனம் பாண்டே, கோவா சென்றுள்ள நிலையில் இச்சம்பவம் நடைபெற்றது. இதையடுத்து சாம் பாம்பே மீது வழக்குப்பதிவு செய்த கோவா காவல்துறை அவரைக் கைது செய்தது.
இந்நிலையில் கைதான சாம் பாம்பேவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கோவாவில் உள்ள கனாகோனா காவல்நிலையத்தில் நான்கு நாள்களுக்கு ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று சாம் பாம்பேவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.