சைக்கிளில் சென்று வாக்களித்தது குறித்து நடிகர் விஜய் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் 234 பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 37 ஆயிரம் இடங்களில் உள்ள 88,937 வாக்குச் சாவடிகளிலும் தகுந்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை முதல் திரையுலகப் பிரபலங்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்.
நடிகர் விஜய், சைக்கிளில் வந்து நீலாங்கரைப் பகுதியில் தனது வாக்கினைச் செலுத்தினார். ரசிகர்கள் அவரைச் சுற்றி முன்னும் பின்னும் தொடர்ந்து வர, சைக்கிளில் வந்து அவர் வாக்களித்திருப்பது சமூகவலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. பெட்ரோல் விலை உயர்வைச் சுட்டிக்காட்டும் விதத்தில் தான் அவர் சைக்கிளில் வந்து தனது வாக்கினைச் செலுத்தினார் என்று விஜய்யின் நடவடிக்கை குறித்து பலரும் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்தார்கள்.
இந்நிலையில் சைக்கிளில் வந்து வாக்களித்தது குறித்து விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் செய்தித் தொடர்பாளர் ரியாஸ் இதுபற்றிக் கூறியதாவது:
வாக்குச்சாவடி உள்ள பகுதியில் கார் செல்ல முடியாது என்பதாலும் வாக்குச்சாவடி வீட்டுக்கு அருகே உள்ளது என்பதாலும் நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தார் என்று அவர் கூறியுள்ளார்.