முகப்பு
செய்திகள்

வரிசையாக ஓடிடியில் வெளியாகும் நடிகர் சூர்யாவின் 4 படங்கள் - ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

நடிகர் சூர்யா தனது தயாரிப்பில் உருவாகியுள்ள 4 படங்களின் ரிலீஸ் தேதியை அடுத்தடுத்து அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

Updated On : 6 ஆகஸ்ட், 2021 at 12:00 PM
பகிர்:

நடிகர் சூர்யா தனது தயாரிப்பில் உருவாகியுள்ள 4 படங்களின் ரிலீஸ் தேதியை அடுத்தடுத்து அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

சமீபத்தில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு 'ஜெய் பீம்', 'எதற்கும் துணிந்தவன்' படங்களின் முதல் பார்வை போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. 

இதில் 'ஜெய் பீம்' படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். சூர்யா தயாரித்துள்ள இந்தப் படத்தை ஞானவேல் இயக்க, ஷான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

Advertisement

மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் “எதற்கும் துணிந்தவன்” பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் சூர்யா நடித்துள்ள நவரசா என்ற இணையத் தொடர் நாளை வெளியாகிறது. 

இந்த நிலையில் சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக 4 படங்களைத் தயாரித்துள்ளார். அந்த 4 படங்களின் வெளியீட்டுத் தேதியையும் அதிரடியாக அறிவித்துள்ளார். அதில் தனது 'ஜெய் பீம்' படம் வருகிற நவம்பர் மாதம் அமேசான் பிரைமில் வெளியாகிறது. 

அவரது 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' திரைப்படம் வருகிற செப்டம்பர்  மாதம் அமேசான் பிரைமில் வெளியாகிறது. இந்தப் படத்தை சூர்யாவுடன் இணைந்து ஜோதிகாவும் தயாரிக்கிறார்.  அரிசில் மூர்த்தி இயக்கும் இந்தப் படத்தில் ரம்யா பாண்டியன், வாணி போஜன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

சசிகுமார், ஜோதிகா இணைந்து நடிக்கும் 'உடன் பிறப்பே', திரைப்படம் அமேசான் பிரைமில் அக்டோபர் மாதம் வெளியாகிறது. இந்தப் படத்தில் சசிகுமார் மற்றும் ஜோதிகாவுடன் இணைந்து சமுத்திரக்கனி, சூரி, நிவேதிதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இரா.சரவணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 

நடிகர் அருண் விஜய், தனது மகனுடன் இணைந்து நடிக்கும் 'ஓ மை டாக்' திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் அமேசான் பிரைமில் வெளியாகிறது. இந்தப் படத்தையும் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தை சரோவ் இயக்குகிறார். நிவாஸ் கே பிரசன்னா இந்தப் படத்துக்கு இசையமைக்க, கோபிநாத் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். 

நடிகர் சூர்யா அடுத்தடுத்து 4 படங்களின் வெளியீட்டுத் தேதியை அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த நான்கு படங்களும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படம் திரையரங்கில் வெளியாகாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. இந்த நிலையில் அவரது அடுத்தப் படத்தையாவது திரையரங்கில் காண வேண்டும் என்ற ரசிகரின் கோரிக்கை 'ஜெய் பீம்' அமேசான் பிரைமில் வெளியாகும் என்ற அறிவிப்பால் நிராசையானது. இருப்பினும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'எதற்கும் துணிந்தவன்' நிச்சயம் திரையரங்கில் தான் வெளியாகும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.