நடிகர் சூர்யாவின் வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்
வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் இருந்து விலக்கு கோரி நடிகர் சூர்யா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் இருந்து விலக்கு கோரி நடிகர் சூர்யா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கடந்த 2010 ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவின் வீட்டில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், 2007 - 2008 மற்றும் 2008 - 2009 ஆம் ஆண்டுகளுக்கான வருமான வரியை மதிப்பீடு செய்து செலுத்த உத்தரவிட்டிருந்தனர்.
இதனை எதிர்த்து நடிகர் சூர்யா தரப்பில் வருவமான வரித்துறை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அப்போது, வருமான வரித்துறையின் மதிப்பீடு செய்யப்பட்டதை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் உறுதி செய்து தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில், இந்த வழக்கு 3 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவு காணப்பட்டதால், வருமான வரிக்குச் சட்டப்படி மாதம் 1 சதவிகிதம் விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரி வழக்கு தொடர்ந்தார்.
அதில் தான் முறையாக வரி செலுத்துவதாகவும், தாமதத்துக்கு வருமான வரித்துறையே காரணம் என்பதால் தனக்கு வட்டி விலக்கு பெற உரிமை உள்ளதாகவும் சூர்யா கூறியிருந்தார். இந்த நிலையில், 'வரி மதிப்பீட்டு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தராததால் வட்டி விலக்கு பெற உரிமையில்லை' என நீதிமன்றத்தில் வருமான வரித்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்த வழக்கு இன்று (திங்கள் கிழமை) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம் வருமான வரித்துறையின் வாதத்தை ஏற்று சூர்யாவின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து நடிகர் சூர்யா மேல் முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.